Bible Language

Psalms 42 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல், இறைவா, என் நெஞ்சம் உம்மை ஆர்வத்துடன் நாடிச் செல்கிறது.
2 இறைவன் மீது, உயிருள்ள இறைவன் மீது என் உள்ளம் தாகங்கொண்டது. என்று சொல்வேன்? இறைவனின் முகத்தை என்று காண்பேன்?
3 உன் இறைவன் எங்கே?" என்று அவர்கள் நாளும் என்னிடம் சொல்லும் போது, என் கண்ணீரே எனக்கு இரவும் பகலும் உணவாயிற்று.
4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு இறைவனின் இல்லத்திற்குச் சென்றேனே! அக்களிப்பும் புகழ் இசையும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும் போது என் உள்ளம் உருகுகிறது.
5 நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை. என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.
6 என் அகத்தே என் உள்ளம் தளர்ச்சியுறுகிறது. ஆகவே யோர்தான் நாட்டினின்றும், ஹெர்மோன், மீசார் மலைகளிலிருந்தும் உம்மை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
7 உம் நீர் வீழ்ச்சிகளின் இரைச்சலால் ஆழம் ஆழத்தை அழைக்கிறது. உம் அலைகள், கடற்திரைகள் எல்லாம் என் மேல் விழுந்தன.
8 பகற்பொழுதில் ஆண்டவர் எனக்கு அருள் புரிவாராக: இரவிலும் இறைவனுக்கு இன்னிசை பாடுவேன், உயிர் தரும் இறைவனைப் புகழ்வேன்.
9 என் பாறை அரணாயிருப்பவரே, ஏன் என்னை மறந்தீர்? என் எதிரியால் நொறுங்குண்டவனாய் வருத்தமுற்று நான் அலைவானேன்?' என்று இறைவனிடம் கூறுவேன்.
10 என் எதிரிகள் என்னைப் பழித்துரைக்கும் போதும், 'உன் இறைவன் எங்கே?' என்று நாளும் கூறும் போதும், என் எலும்புகள் நொறுங்குண்டு போகின்றன.
11 என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகின்றாய்? இறைவன்மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.