Bible Versions
Bible Books

Proverbs 24 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே.
2 அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப் பற்றியே பேசுகிறார்கள். -20-
3 ஞானத்தினாலும் புரிந்துகொள்தலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது.
4 அறிவு அறைகளை அரிய அழகுள்ள திரவியங்களால் நிரப்புகிறது. -21-
5 ஞானம் ஒருவனை மிகவும் வலிமையுள்ளவனாக்கும். அறிவு ஆற்றலைத் தருகிறது.
6 நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும். -22-
7 முட்டாள்களால் ஞானத்தை உணர்ந்து கொள்ளமுடியாது. முக்கியமானவற்றைப் பற்றி ஜனங்கள் கலந்தாலோசிக்கும்போது முட்டாள்களால் எதுவும் சொல்ல முடியாது. -23-
8 நீ எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீமை செய்வதைப்பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தால், தொந்தரவுகளை உருவாக்குபவன் என்று ஜனங்கள் உன்னை நினைத்துக்கொள்வார்கள். நீ சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள்.
9 அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள். -24-
10 துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய். -25-
11 ஜனங்கள் ஒருவனைக் கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும்.
12 "இது எனது வேலை இல்லை" என்று கூறாதே. அனைத்தையும் கர்த்தர் அறிவார். நீ எதற்காக அவற்றைச் செய்கிறாய் என்பதையும் அவர் அறிவார். கர்த்தர் உன்னைக் கவனித்து அறிகிறார். உனக்கு தகுந்த வெகுமதிகளைக் கர்த்தர் தருவார். -26-
13 என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது.
14 இதுபோலவே ஞானமானது உன் ஆத்துமாவுக்கு நல்லது. உன்னிடம் ஞானம் இருக்குமானால் உன்னிடம் நம்பிக்கையும் இருக்கும். உன் நம்பிக்கைக்கு முடிவிருக்காது. -27-
15 நல்லவனிடமிருந்து பொருளைத் திருடும் அல்லது அவன் வீட்டையே அபகரிக்கும் திருடனைப்போல நீ இருக்காதே.
16 நல்லவன் ஏழுமுறை விழுந்தாலும் மீண்டும் எழுந்துவிடுவான். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் துன்பங்களால் தோற்கடிக்கப்படுவார்கள். -28-
17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே.
18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காகக் கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார். -29-
19 தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே.
20 தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும். -30-
21 மகனே! கர்த்தருக்கும் அரசனுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே.
22 ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் அரசனும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது.
23 இவை ஞானம் உள்ளவர்களின் வார்த்தைகள். ஒரு நீதிபதி நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவன் தெரிந்தவன் என்பதற்காக அவனுக்கு சார்பாக இருக்கக்கூடாது.
24 ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள்.
25 ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
26 ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது.
27 உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.
28 சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே.
29 "அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்" என்று சொல்லாதே.
30 சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன்.
31 அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன.
32 நான் இவற்றைப் பார்த்து அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
33 ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா?
34 இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனது போல் இருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×