Bible Versions
Bible Books

2 Samuel 11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மறு ஆண்டு அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்த போது, தாவீது யோவாபையும் அவரோடு தம் வீரரையும் இஸ்ராயேலர் அனைவரையும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரை அழித்தொழிந்து, ரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.
2 அன்றொரு நாள் தாவீது நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில், அவருக்கு எதிரே தம் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். அப்பெண் மிகவும் அழகாக இருந்தாள்.
3 அப்பொழுது அரசர் அப்பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பி, அவள் எலியாமின் மகளும் ஏத்தையனான உரியாசின் மனைவியுமான பெத்சாபே என்ற அறிந்து கொண்டார்.
4 பின்னர் தாவீது ஆள் அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் அவரிடம் வந்த போது அரசர் அவளோடு படுத்தார். பிறகு அவள் தன் தீட்டு நீங்கத் தன்னைத் தூய்மைப்படுத்தினாள்.
5 கருவுற்றவளாய்த் தன் வீடு திரும்பிய பின், தான் கருவுற்றிருப்பதாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
6 அப்போது தாவீது யோவாபிடம் ஆள் அனுப்பி "ஏத்தையனான உரியாசை என்னிடம் அனுப்பிவை" என்று சொன்னார். அப்படியே யோவாப் ஏத்தையனான உரியாசைத் தாவீதிடம் அனுப்பி வைத்தான்.
7 உரியாசு தாவீதிடம் வந்த போது, அவர் அவனை நோக்கி, "யோவாபும் மக்களும் நலமாய் இருக்கிறார்களா ? போர் எவ்வாறு நடந்து வருகிறது?" என்று விசாரித்தார்.
8 பிறகு தாவீது உரியாசை நோக்கி, "உன் இல்லத்திற்குப் போய் உன் கால்களைக் கழுவு" என்றார். உரியாசு அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, அரச உணவு அவனுக்குப் பின்னால் அனுப்பப் பட்டது.
9 உரியாசோ தன் இல்லத்திற்குப் போகாமல் தன் தலைவரின் மற்ற ஊழியர்களோடு அரண்மனை வாயிலில் படுத்துக் கொண்டான்.
10 உரியாசு தன் இல்லத்திற்குச் செல்லவில்லை என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாசை நோக்கி, "நீ பயணத்திலிருந்து வந்தவனல்லவா? நீ உன் வீட்டுக்குப் போகாதது ஏன்?" என்று கேட்டார்.
11 உரியாசு தாவீதைப் பார்த்து, "கடவுள் பேழையும் இஸ்ராயேலும் யூதாவும் கூடாரங்களில் இருக்க, என் தலைவன் யோவாபும் என் அரசரின் சேவகரும் வெளியே தங்கியிருக்க, நான் உண்ணவும் குடிக்கவும், என் மனைவியுடன் படுக்கவும் என் வீட்டிற்குள் போவேனோ? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்" என்றான்.
12 அப்போது தாவீது உரியாசை நோக்கி, "இன்றும் நீ இங்கேயே இரு; நாளை நான் உன்னை அனுப்பி வைப்பேன்" என்றார். அப்படியே உரியாசு அன்றும் மறுநாளும் யெருசலேமில் தங்கி இருந்தான்.
13 தாவீது அவனைத் தன் முன்னிலையில் உண்ணவும் குடிக்கவும் அழைத்து அவனுக்குப் போதை ஊட்டினார். ஆயினும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் மாலையிலேயே வெளியே போய் அரசரின் சேவகரோடு தன் படுக்கையில் தூங்கினான்.
14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை உரியாசின் கையில் கொடுத்து அனுப்பினார்.
15 அக்கடிதத்தில், "போர் கடுமையாக நடக்கும் இடத்தில் உரியாசை நீர் படை முகத்தில் நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி விட்டுவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது.
16 அவ்வாறு யோவாப் நகரை முற்றுகையிடுகையில் மிக்க ஆற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்திருந்த இடத்தில் உரியாசை நிறுத்தினான்.
17 வீரர் நகரிலிருந்து வெளிப்போந்து யோவாபோடு போரிட்ட போது தாவீதின் வீரருள் பலர் விழுந்து மடிந்தனர். ஏத்தையனாகிய உரியாசும் இறந்தான்.
18 அப்போது போரைப் பற்றித் தாவீதுக்கு அறிவிக்கும்படி யோவாப் ஆள் அனுப்பி,
19 தான் அனுப்பின ஆளை நோக்கி, "போரின் முடிவுகளைப் பற்றி நீ அரசருக்கு அறிவித்த பின்,
20 ஒரு வேளை அவர் சினந்து, 'நீங்கள் நகர மதில்களுக்கு அண்மையில் நின்று போரிட்டது ஏன்? எதிரிகள் நகர மதில்கள் மேலிருந்து ஈட்டியை எறிவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதோ?
21 யெரோபாவின் மகன் அபிமெலேக்கைக் கொன்றவன் யார்? தேபெசு நகர முற்றுகையின் போது ஒரு பெண் நகர மதிலின் மேலிருந்து எந்திரக் கல்லின் ஒரு துண்டை அவன் மேல் எறிந்ததாலன்றோ அவன் மடிந்தான்? நீங்கள் நகர மதில் அருகே சென்றது ஏன்?' என்று அரசன் உன்னிடம் சொன்னால், நீ அவரைப் பார்த்து, 'உம்முடைய ஊழியனும் ஏத்தையனுமான உரியாசும் மடிந்தான்' என்று சொல்" என்றான்.
22 அவ்வாறே தூதன் புறப்பட்டுத் தாவீதிடம் வந்து, யோவாப் தனக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவருக்கு அறிவித்தான்.
23 அவன் தாவீதை நோக்கி, "எதிரிகள் மேலோங்கி வயல் வெளியில் எங்களோடு போரிட வந்தனர். நம்மவர்களோ அவர்கள் மேல் விழுந்து நகர் வாயில் வரை அவர்களைத் துரத்தின போது,
24 வில் வீரர் நகர மதில் மேலிருந்து உம் ஊரியர்களின் மேல் அம்பு எய்ததால் அரசரின் சேவகரில் பலர் வீழ்ந்ததோடு உம் ஊழியனாகிய ஏத்தையன் உரியாசும் மாண்டான்" என்றான்.
25 அப்பொழுது தாவீது தூதனை நோக்கி, "நீ யோவாபிடம் சொன்று: 'இது குறித்து நீர் கலங்கவேண்டாம். போரின் போக்கு பலவிதம். வாள் ஒருமுறை ஒருவனையும், மற்றொரு முறை வேறொருவனையும் இரையாக்கிவிடும். நீர் உம் வீரர்களைத் தேற்றி நகரை விரைவில் பிடித்துத் தகர்க்க அவர்களைத் தூண்டும்' என்று சொல்" என்றார்.
26 உரியாசின் மனைவியோ தன் கணவன் உரியாசு இறந்துவிட்டான் என்று கேள்வியுற்று அவனுக்காக இழவு கொண்டாடினாள்.
27 இழவு நாள் முடிந்தவுடன் தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன் வீட்டிற்குக் கொணர்ந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீதின் இச் செயலோ ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×