Bible Versions
Bible Books

Job 20 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அடுத்து நாகாமத்தீத்தனான சோப்பார் பேசினான்:
2 இதற்கு மறுமொழி கூற எனக்குள் சிந்தனைகள் விரைகின்றன, பேசவேண்டும் என என் உள்ளம் துடிக்கிறது.
3 என்னைச் சிறுமைப்படுத்தும் எதிர்வாதத்தைக் கேட்டேன், என் இதயம் என்னை விடை கூறத் தூண்டுகிறது.
4 உலகில் மனிதன் நடமாடத் தொடங்கிய பண்டை நாளிலிருந்து தெளிவுறும் உண்மையொன்று தெரியுமா?
5 தீயவரின் வெற்றிப் பெருமிதம் நீடிப்பதில்லை, இறைப்பற்றில்லாதவரின் மகிழ்ச்சி இமைப் பொழுதில் மறையும்.
6 அவனுடைய மேன்மை வானளாவ உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகத்தைத் தொடுமாயினும்,
7 தன் சொந்த மலத்தைப் போல் அவனும் அழிந்துபோவான்; ஏற்கெனவே அவனைக் கண்டவர்கள், 'எங்கே அவன்?' என்பார்கள்.
8 கனவைப் போல் பறந்து விடுவான், காணப்படான், இரவில் கண்ட காட்சிபோல் மறைந்து போவான்.
9 முன்னே அவனைப் பார்த்த கண் இனிக் காணாது, அவனிருந்த இடமும் அவனை இனிப் பார்க்காது.
10 அவன் மக்கள் ஏழைகளின் தயவை நாடுவர், அவன் செல்வத்தை அவன் கைகளே திருப்பித்தரும்.
11 அவன் எலும்புகளில் இளமையின் வலிமை நிறைந்திருந்தது, அதுவும் அவனோடே புழுதியில் கிடக்கும்.
12 தீமை அவன் வாய்க்குச் சுவையாயிருந்தது, தன் நாவின் கீழ் அதை அவன் மறைத்து வைத்தான்.
13 அதை வெளியே விட அவனுக்கு மனமில்லை, தன் வாய்க்குள்ளேயே அதை அடக்கிக் கொண்டான்.
14 அவன் வயிற்றிலே அவ்வுணவு மாற்றமடையும், அவனுக்குள் அது விரியன் பாம்பின் நஞ்சாக மாறும்.
15 தான் விழுங்கிய செல்வத்தை வெளியே கக்குவான், அவன் வயிற்றிலிருந்து கடவுள் அதை வெளியேற்றுவார்.
16 விரியன் பாம்பின் நஞ்சை உறிஞ்சிக் குடிப்பான், நச்சுப் பாம்பின் நாக்கு அவனைக் கொன்று விடும்.
17 ஆறுகளை அவன் ஏறெடுத்துப் பாரான், தேனும் நெய்யும் பெருகும் ஓடைகளைக் காணான்.
18 தனது உழைப்பின் பலனை இழந்து விடுவான், அதை அவன் உண்டு பார்க்கமாட்டான்; வணிகம் செய்து சேர்த்த வருமானத்தால், கொஞ்சமும் அவனுக்கு மகிழ்ச்சி இராது.
19 ஏனெனில் ஏழைகளை ஒடுக்கினான், அவர்களைக் கைவிட்டான், தான் கட்டாத வீட்டைப் பிறனிடமிருந்து பறித்தான்.
20 அவனது பேராசைக்கு அமைதியே இல்லை, அவனது சேமிப்பு அவனைக் காப்பாற்றாது.
21 அவன் உண்ட பின் யாதொன்றும் மீதியில்லை, அவன் வளமான வாழ்வு நிலைத்திராது.
22 வளம் நிறைந்த வாழ்விலும் நெருக்கடி அவனை ஒடுக்கும், அவல நிலையின் கொடுமையெல்லாம் அவன் மேல் வரும்.
23 அவன் தன் வயிற்றை நிரப்பும் போது, கடவுள் தம் கோபத்தின் ஆத்திரத்தை அவன் மேல் கொட்டுவார், அவனுக்கு உணவாக அதைப் பொழிவார்.
24 இருப்புப் படைக்கலத்திற்குத் தப்பியோடுவான், ஆனால் வெண்கல அம்பு அவனை ஊடுருவிப் பாயும்.
25 அதை வெளியே இழுத்தால் அவனுடலைக் கிழித்துக் கொண்டு வரும், மின்னும் அம்பு முனை அவன் பிச்சிலிருந்து வெளிப்படும், அச்சமும் நடுக்கமும் அவனை ஆட்கொள்ளும்.
26 அடர்ந்த காரிருள் அவனுக்காகக் காத்திருக்கிறது, மனிதன் மூட்டாத நெருப்பு அவனை விழுங்கும், அவன் கூடாரத்தில் எஞ்சியிருப்பதும் அழிக்கப்படும்.
27 வான் வெளி அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தும், நிலவுலகம் அவனுக்கெதிராய் எழுந்து நிற்கும்.
28 அவன் வீட்டின் உடைமைகள் வெள்ளத்தில் போகும், கடவுளுடைய கோபத்தின் நாளில் அடித்துப் போகப்படும்.
29 கொடியவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே; கடவுள் அவனுக்குக் குறிக்கும் உரிமைச் சொத்து இதுவே."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×