Bible Versions
Bible Books

Jonah 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அமாத்தி என்பவரின் மகனான யோனாஸ் என்பவருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
2 நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய், அவர்கள் செய்யும் தீமை நம் திருமுன் எட்டிற்று என்று அவர்களுக்கு அறிவி" என்றார்.
3 யோனாசோ ஆண்டவரின் திருமுன்னிருந்து தார்சீசுக்குத் தப்பியோடிப் போக எண்ணிப் புறப்பட்டார்; ஆகவே யோப்பா பட்டினத்திற்குப் போய், தார்சீசுக்குப் போகத் தயாராய் இருந்த ஒரு கப்பலைக் கண்டு, கட்டணத்தைக் கொடுத்து ஆண்டவருடைய திருமுன்னிருந்து தப்பி அவர்களோடு தார்சீசுக்குப் போகக் கப்பலேறினார்.
4 ஆனால் ஆண்டவர் கடலின் மேல் பெருங்காற்றை அனுப்பினார்; கடலில் பெரும் புயல் உண்டாயிற்று; கப்பலோ உடைந்து போகும் நிலையில் தத்தளித்தது.
5 அப்போது கப்பலில் இருந்தவர்கள் திகில் கொண்டவர்களாய்த் தத்தம் கடவுளைக் கூவி மன்றாடினர்; கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளை வாரிக் கடலில் எறிந்தார்கள்; யோனாசோ கப்பலின் அடித்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தார்.
6 கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது, நீ உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாயே? எழுந்திரு, உன் கடவுளைக் கூவி மன்றாடு; ஒருவேளை நாம் அழிந்து போகாதபடி அந்தக் கடவுள் நம்மை நினைத்தருள்வார்" என்றான்.
7 கப்பலில் இருந்தவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்து, "எவனை முன்னிட்டு நமக்கு இந்தத் தீங்கு வந்தது என்றறியத் திருவுளச் சீட்டுப் போடுவோம், வாருங்கள்" என்றனர்; அவ்வாறு அவர்கள் போட்ட சீட்டு யோனாசின் பேரில் விழுந்தது.
8 அப்போது அவர்கள் அவரைப் பார்த்து, "இந்த ஆபத்து எங்களுக்கு வரக் காரணம் என்ன? உன் தொழிலென்ன? நீ எந்த ஊர்? எங்கே போகிறாய் ? உன் இனத்தார் யார்? சொல்" என்றார்கள்.
9 அதற்கு அவர் அவர்களை நோக்கி, "நான் ஓர் எபிரேயன்; கடலையும் நிலத்தையும் படைத்தவரான விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரின் அடியான்" என்று விடையளித்தார்.
10 அப்போது அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார்கள்; அவர்களோ அவர் ஆண்டவரின் திருமுன்னிருந்து தப்பியோடுகிறார் என்பதை அவரிடமிருந்தே கேட்டறிந்தனர்.
11 கடல் அலைகள் பொங்கியெழுந்தமையால், அவர்கள், "கடல் எங்கள் மட்டில் அமைதியடையும் படிக்கு உனக்கு நாங்கள் செய்ய வேண்டிதென்ன?" என்று அவரிடம் கேட்டார்கள்.
12 அதற்கு அவர், "என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்; அப்போது உங்கள் மேல் கடல் அமைதி கொள்ளும்; ஏனெனில் என்னை முன்னிட்டுத் தான் இந்தக் கடும் புயல் உங்கள் மேல் வந்தது என்பதை நான் அறிவேன்" என்றார்.
13 ஆயினும், கப்பலைக் கரைக்குக் கொண்டு வர முனைந்து தண்டு வலித்தனர்; ஆனால் இயலவில்லை. ஏனெனில் கடல் அலைகள் மேலும் மேலும் பொங்கிக் கொந்தளித்தன.
14 ஆகவே, அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டு, "ஆண்டவரே, இந்த மனிதனின் உயிரை முன்னிட்டு எங்களை அழிய விடாதேயும்; மாசற்ற இரத்தப் பழியை எங்கள் மேல் சுமத்தாதேயும்; ஏனெனில், ஆண்டவரே, உமக்கு விருப்பமானதை நீர் தான் செய்கிறீர்" என்று மன்றாடினர்.
15 பிறகு அவர்கள் யோனாசைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கொந்தளிப்பும் ஓய்ந்தது.
16 அந்த மனிதர்கள் ஆண்டவர் மட்டில் பெரிதும் அச்சங் கொண்டு ஆண்டவருக்குப் பலியிட்டு நேர்ச்சைகளும் செய்து கொண்டார்கள்.
17 (2:1) யோனாசை விழுங்கும்படி ஆண்டவர் ஒரு பெரிய மீனுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்; யோனாசோ அந்த மீன் வயிற்றிலே மூன்று பகலும் மூன்று இரவும் இருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×