Bible Versions
Bible Books

Job 24 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 எல்லாம் வல்லவர் தீர்ப்பின் காலங்களைக் குறிப்பிடாததேன்? அவரை அறிந்தவர்கள் அவர் நாட்களைக் காணாததேன்?
2 தீயவர்கள் காணிக் கற்களைத் தள்ளி நடுகிறார்கள், மந்தைகளைக் கொள்ளை கொண்டு போய் மேய்க்கிறார்கள்.
3 திக்கற்றவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டு போகிறார்கள், கைம் பெண்ணின் எருதை அடைமானமாய் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.
4 ஏழைகள் வழியை விட்டு அப்புறப்படுத்தப்படுகிறார்கள், நாட்டின் ஏழைகளெல்லாம் ஓடி ஒளிகிறார்கள்.
5 இவர்களுள் சிலர் காட்டுக் கழுதைகள் போல், பாலை நிலத்தில் இரைக்காகக் காத்திருந்து தங்கள் பிள்ளைகளுக்கு உணவு தேடும் வேலை மேல் கிளம்புகிறார்கள்.
6 கயவனின் வயலில் அறுவடை செய்கிறார்கள், பொல்லாதவனின் திராட்சைத் தோட்டத்தில் பழம் பறிக்கிறார்கள்.
7 ஆடையின்றி இரவெல்லாம் நிருவாணமாய்க் கிடக்கிறார்கள், குளிரிலே போர்த்திக் கொள்ள அவர்களுக்குப் போர்வையில்லை.
8 மலைகளில் பெய்யும் மழையால் நனைகிறார்கள், ஒதுங்குவதற்கு இடமின்றிப் பாறைகளில் ஒண்டுகிறார்கள்.
9 தந்தையில்லாப் பிள்ளைகள் சொத்தைக் கொடியவர்கள் பறிக்கின்றனர். ஏழைகளின் மேலாடைகளை அடைமானமாய் எடுக்கின்றனர்.
10 அவ்வேழைகள் ஆடையின்றி நிருவாணமாய்த் திரிகிறார்கள், பசியோடு அரிக்கட்டுகளைத் தூக்கிக் செல்லுகின்றனர்.
11 செக்குகளில் எண்ணெய் ஆட்டுகிறார்கள். திராட்சைப் பழம் பிழிந்தும், தாகத்தால் வருந்துகிறார்கள்.
12 நகரத்தில் சாகக் கிடப்போரின் முனகல்கள் கேட்கின்றன, காயம் பட்டவர்களின் உள்ளம் உதவிக்காகத் தவிக்கிறது, ஆயினும் கடவுள் அவர்கள் மன்றாட்டைக் கேட்கிறதில்லை.
13 ஒளியை எதிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள், ஒளியின் நெறிகள் அவர்கள் அறியாதவை, அதன் வழிகளில் அவர்கள் நிலை கொள்வதில்லை.
14 ஏழைகளையும் எளியவர்களையும் கொல்வதற்காக, இருள் சூழ்ந்ததும் கொலைகாரன் கிளம்புகிறான், நள்ளிரவில் திருடனைப் போல் சுற்றித் திரிவான்.
15 மாலை மயங்கட்டுமென விபசாரன் காத்திருக்கிறான், 'யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்' என்று சொல்லிக்கொண்டு- முக மூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறான்.
16 காரிருளில் வீடுகளைக் கன்னமிடுவோர் பலர், பகல் வேளையில் அவர்கள் பதுங்கிக் கிடக்கின்றனர், ஒளியைப் பார்க்கவே விரும்பமாட்டார்கள்.
17 காரிருள் தான் அவர்களனைவர்க்கும் காலை நேரம்; காரிருளின் திகில்கள் அவர்களுக்குப் பழக்கமானவை.
18 நீங்களோ, 'பெருவெள்ளம் அவர்களை விரைவில் வாரிச் செல்லும், அவர்கள் பாகம் நாட்டில் சபிக்கப்பட்டுள்ளது, அவர்களின் திராட்சைத் தோட்டத்தில் பழம் பிழிவோன் எவனும் போகவில்லை.
19 வறட்சியும் வெயிலும் பனி நீரைத் தீய்ப்பது போல் பாதாளமும் பாவிகளைத் தீய்த்து விடும்.
20 பெற்றெடுத்த வயிறே அவர்களை மறந்து விடும், அவர்கள் பெயர் எவராலும் நினைவு கூரப்படாது, இவ்வாறு மரத்தைப் போல் கொடுமை முறிக்கப்படும்.
21 ஏனெனில் பிள்ளை பெறாத மலடிக்குத் தீங்கு செய்தார்கள். கைம்பெண்ணுக்கு ஒரு நன்மையும் செய்ததில்லை' என்கிறீர்கள்.
22 ஆயினும் வலியோரின் வாழ்வைக் கடவுள் தம் வல்லமையால் நீடிக்கச் செய்கிறார், அவர்களுக்கு வாழ்க்கை அவநம்பிக்கையாகும் போது, புத்துணர்ச்சி பெற்று எழுகிறார்கள்.
23 அவர்களை அவர் பாதுகாக்கிறார், அவர்களைத் தாங்குகிறார்; அவர் கண்கள் அவர்களுடைய வழிகளில் கருத்தாயிருக்கின்றன.
24 கொஞ்ச காலம் உயர்வடைந்த பின் அழிந்து விடுகிறார்கள்; இளஞ் செடிபோல் வாடி வதங்கிப் போகிறார்கள், தானியக் கதிர் நுனி போல் அறுக்கப்படுகிறார்கள்.
25 இதெல்லாம் உண்மையல்லவென்றால், நான் சொல்வது பொய்யென்றோ அல்லது வீண் சொற்களென்றோ எவன் எண்பிப்பான்?"
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×