Bible Versions
Bible Books

Job 22 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அப்போது தேமானியனான ஏலிப்பாஸ் பேசத் தொடங்கினான். அவன் சொன்னதாவது:
2 மனிதன் கடவுளுக்குப் பயன்படக்கூடுமோ? ஞானமுள்ளவன் தனக்குத்தானே பயனுள்ளவனாயிருக்கிறான்.
3 நீர் நேர்மையாயிருந்தால், கடவுளுக்கு அதனால் இன்பமுண்டோ? உம் நெறிகள் குற்றமற்றவையாயின், அது அவருக்கு ஆதாயமோ?
4 நீர் அவருக்கு அஞ்சுவதற்காகவா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதை முன்னிட்டா உம்மோடு வழக்காடுகிறார்?
5 நீர் செய்த தீமை பெரிதல்லவா? உம்முடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லை!
6 ஏனெனில் காரணமின்றி உம் சகோதரரிடம் நீர் அடகு வாங்கினீர், ஆடைகளைப் பறித்து விட்டுப் பலரை நிர்வாணிகளாய் விட்டீர்.
7 தாகமுற்றவனுக்கு நீர் தண்ணீர் கொடுக்கவில்லை, பசித்து வந்தவனுக்கு உணவு தர மறுத்தீர்.
8 உமக்கு வேண்டியவர்கள் குடியேறி வாழும்படி பிறர் நிலத்தை வன்முறையால் கைப்பற்றினீர்.
9 கைம்பெண்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டீர், திக்கற்றவர்களின் கைகளை முறித்துப் போட்டீர்.
10 ஆதலால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன, பேரச்சம் உம்மைத் திடீரென மேற்கொள்ளுகிறது.
11 உமது ஒளி இருளாக மாறிவிட்டது, உம்மால் இனிப் பார்க்க முடியாது, வெள்ளப் பெருக்கு உம்மை மூழ்கடிக்கிறது.
12 வான்வெளிக்கும் மேலே அல்லவா கடவுள் தங்கியிருக்கிறார்? வானத்து விண்மீன்களைப் பாரும், அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன!
13 ஆதலால் நீர், 'கடவுளுக்கு என்ன தெரியும்? இருளை ஊடுருவி நோக்கி அவரால் தீர்ப்பிட முடியுமா?
14 காண முடியாதபடி திண்ணிய மேகங்கள் மறைக்கின்றன, அவரோ வான்பரப்பில் உலவுகிறார்' என்கிறீர்.
15 கொடிய மனிதர் போன பழைய நெறியிலேயே நீரும் போக எண்ணுகிறீரோ?
16 காலம் வருமுன்னே அவர்கள் பறிக்கப்பட்டனர், அவர்களின் அடிப்படையை வெள்ளம் வாரிச் சென்றது.
17 கடவுளை நோக்கி, அவர்கள், 'எங்களை விட்டகலும்' என்றும், 'எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்' என்றும் சொன்னார்கள்.
18 ஆயினும், அவர்கள் வீடுகளை அவர் நன்மைகளால் நிரப்பினார்- தீயவர்களின் ஆலோசனை எனக்குத் தொலைவாயுள்ளது.
19 நேர்மையுள்ளவர்கள் இதைக் கண்டு மகிழ்கிறார்கள், மாசற்றவர்கள் தீயோரை எள்ளி நகைக்கிறார்கள்:
20 அவர்களுடைய பெருமிதம் வீழ்த்தப்பட்டது, அவர்கள் விட்டுச்சென்றது தீக்கிரையாயிற்று' என்கிறார்கள்.
21 கடவுளுக்கு இணங்கும்; சமாதானமாய் இரும்; அதனால் உமக்கு நன்மை விளையும்.
22 அவர் வாய் மொழியிலிருந்து கற்றுக் கொள்ளும், அவர் சொற்களை உம் உள்ளத்தில் சேமித்து வையும்.
23 எல்லாம் வல்லவரிடம் நீர் தாழ்மையோடு திரும்பி வந்தால், உம் கூடாரங்களிலிருந்து அநீதியை அப்புறப்படுத்தினால்,
24 பசும்பொன்னைப் புழுதியென நீர் கருதினால், ஒப்பீர் நாட்டுத் தங்கத்தை ஆற்றுக் கற்களென மதித்தால்,
25 எல்லாம் வல்லவரே உமக்குப் பசும்பொன்னாவார், உமக்கு விலையுயர்ந்த வெள்ளியாய் இருப்பார்.
26 அப்போது, எல்லாம் வல்லவரில் நீர் இன்பம் காண்பீர், கடவுளை நோக்கி உம் முகத்தை உயர்த்துவீர்.
27 நீர் அவரைப் பார்த்து மன்றாடுவீர், அவர் உமது மன்றாட்டைக் கேட்டருள்வார், உம் நேர்ச்சிக் கடன்களை நீர் செலுத்துவீர்.
28 நீர் துணிந்த கருமம் வெற்றியாய் முடியும், உம்முடைய வழிகள் ஒளி நிறைந்திருக்கும்.
29 ஏனெனில் செருக்குள்ளவர்களைக் கடவுள் தாழ்த்துகிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களை மீட்கிறார்.
30 மாசற்றவனை அவர் விடுவிக்கிறார், உம்முடைய கைகளின் தூய்மையால் நீர் விடுதலை பெறுவீர்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×