Bible Versions
Bible Books

James 2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 என் சகோதரர்களே, மாட்சிமை மிக்க நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள நீங்கள் மக்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை நடத்தாதீர்கள்.
2 நீங்கள் கூடியுள்ள இடத்தில், பொன் மோதிரமணிந்து பகட்டான உடை உடுத்திய ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அழுக்குக் கந்தையோடு ஏழை ஒருவனும் அங்கே வருகிறான்.
3 பகட்டாக உடுத்தியவனைப் பார்த்து, "ஐயா, தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று கவனித்துக் கொள்கிறீர்கள். ஏழையிடமோ, "அடே, அங்கே நில்" என்கிறீர்கள், அல்லது "தரையில் உட்கார்" என்கிறீர்கள்.
4 இப்படி உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தவறான முறையில் தீர்ப்பிடுகிறீர்கள் அல்லவா?
5 என் அன்புச் சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகினர் கண்ணுக்கு ஏழையாய் உள்ளவர்களைக் கடவுள் விசுவாசத்தில் செல்வமுடையவர்களாகவும், தம்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு வாக்களித்த அரசில் உரிமை தரவும் தேர்ந்துகொள்ளவில்லையா?
6 நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்கள் யார்?
7 உங்களை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்பவர்கள் யார்? பணக்காரர்கள் அல்லரா? யாருக்கு நீங்கள் உரியவர்களாய் இருக்கிறீர்களோ அவருடைய திருப்பெயரைப் பழித்துரைப்பவர்கள் அவர்கள் அல்லரோ?
8 "உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று மறைநூல் கூறும் இறையரசின் திருச்சட்டத்தை நீங்கள் கடைப்பிடிப்பீர்களாகில் நன்று.
9 ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம். திருச்சட்டத்தை மீறுகிறவர்களென அச்சட்டமே உங்களைக் கண்டனம் செய்கிறது.
10 சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கும் ஒருவன், ஒன்றில் மட்டும் தவறினால், சட்டம் முழுவதையும் மீறிய குற்றத்திற்கு ஆளாகிறான்.
11 ஏனெனில், "விபசாரம் செய்யாதே" என்று கூறியவர், "கொலை செய்யாதே" என்றும் கூறியுள்ளார். நீ விபசாரம் செய்யாவிடினும் கொலை செய்தால் சட்டத்தை மீறியவன் ஆகிவிட்டாய்.
12 விடுதலையாக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.
13 இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற தீர்ப்புத்தான் கிடைக்கும். இரக்கம் காட்டுபவன் தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை.
14 என் சகோதரர்களே, தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை மீட்க முடியுமா?
15 போதிய உடையோ அன்றாட உணவோ இல்லாத சகோதர சகோதரி யாரேனும் இருந்தால், தேவையானது ஒன்றையும் கொடாமல்,
16 ஒருவன் அவர்களைப் பார்த்து, "சுகமாகப் போய் வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்பானாகில் பயன் என்ன?
17 விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும்.
18 ஆனால், "ஒருவனிடம் விசுவாசம் உள்ளது, இன்னொருவனிடம் செயல் உள்ளது; அதனால் என்ன?" என்று யாராவது சொல்லக்கூடும். செயல்கள் இல்லாத அந்த விசுவாசத்தை எனக்குக் காட்டு. நான் செயல்களைக் கொண்டு என் விசுவாசத்தை உனக்குக் காட்டுகிறேன்.
19 கடவுள் ஒருவரே என்று நீ விசுவசிக்கிறாய், நல்லது தான். பேய்கள் கூட அதை விசுவசிக்கின்றன; விசுவசித்து நடுங்குகின்றன.
20 அறிவிலியே, செயலற்ற விசுவாசம் பயனற்றதென நீ அறிய வேண்டுமா? நம் தந்தையாகிய ஆபிரகாமைப் பார்.
21 தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின் மேல் பலி கொடுத்த போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவரானார்?
22 விசுவாசமும் செயல்களும் ஒருங்கே செயலாற்றின என்பதும், செயல்களால் விசுவாசம் நிறைவு பெற்றது என்பதும் இதிலிருந்து புலப்படுகிறதன்றோ?
23 இவ்வாறு "ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவர் என மதித்தார்" என்ற மறைநூல் வாக்கு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பன் எனவும் அழைக்கப் பெற்றார்.
24 ஆகவே, மனிதன் விசவாசத்தினால் மட்டுமன்று, செயல்களாலும் இறைவனுக்கு ஏற்புடையவனாகிறான் என்று தெரிகிறது.
25 அவ்வாறே, ராகாப் என்ற விலைமாது தூதவர்களை வரவேற்று, வேறு வழியாய் அனுப்பிய போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவளானாள்?
26 ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×