Bible Versions
Bible Books

2 Corinthians 6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 இறைவனின் உடனுழைப்பாளிகளான நாங்கள், நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாமென மன்றாடுகிறோம்.
2 ஏனெனில், "ஏற்ற காலத்தில் உனக்குச் செவிமடுத்தேன்; மீட்பின் நாளில் உனக்குத் துணை நின்றேன்" என்கிறார் இறைவன். இதோ, அந்த ஏற்புடைய காலம் இதுவே.
3 எங்கள் திருப்பணி, பழிச்சொல்லுக்கு உட்படாதவாறு நாங்கள் யாரையும் எதிலும் மனம் நோகச் செய்யவில்லை.
4 ஆனால், வேதனைகள், நெருக்கடி, இடுக்கண்,
5 சாட்டையடிகள், சிறை வாழ்வு, குழப்பங்கள், அயரா உழைப்பு, கண்விழிப்பு, பட்டினி இவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியோடு ஏற்றுக்கொண்டு,
6 புனிதம், அறிவு, பொறுமை, பரிவு, பரிசுத்த ஆவிக்குரிய செயல்கள், கள்ளமில்லா அன்பு இவற்றைக் கடைப்பிடித்து,
7 உண்மையே பேசி, கடவுளின் வல்லமையைப் பெற்றுக்கொண்டு இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வைச் சார்ந்த படைக்கலங்களை வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் தாங்கி,
8 மேன்மையிலும் இழிவிலும், தூற்றப்படினும், போற்றப்படினும், அனைத்திலும் நாங்கள் கடவுளின் பணியாளரென்றே நடத்தையில் காட்டுகிறோம். எங்களை வஞ்சகர் என்கிறார்கள்; நாங்களோ உண்மையுள்ளவர்கள்.
9 அறியப்படாதவர்கள் என்கிறார்கள்; ஆனால், எல்லாரும் எங்களை அறிவார். சாகவேண்டியவர்களைப் போல் இருந்தாலும், இதோ, உயிர் வாழ்கிறோம். நாங்கள் ஒறுக்கப்படுகிறோம்; ஆனால், சாவுக்கு இரையாவதில்லை.
10 துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்த் தென்படுகிறோம்; ஆனால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். நாங்கள் ஏழைகளாயினும், பலரைச் செல்வராக்குகிறோம். ஒன்றுமே இல்லாதவர்கள்போல் இருக்கிறோம்; ஆனால், அனைத்துமே எங்களுக்குச் சொந்தம்.
11 கொரிந்தியரே, ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசினோம்; எங்கள் உள்ளத்தில் உள்ளதை உங்களுக்கு வெளிப்படுத்தினோம்.
12 எங்கள் நெஞ்சம் கூம்பிவிடவில்லை, உங்கள் நெஞ்சந்தான் கூம்பிவிட்டது
13 அப்படியிருக்க, என் குழந்தைகளிடம் சொல்லுவதுபோல் சொல்லுகிறேன்: நான் காட்டிய நேர்மைக்கு ஈடாக நீங்களும் உங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்.
14 அவிசுவாசிகளுடன் நீங்கள் தகாத முறையில் ஒரே நுகத்தடியில் இணைந்திருக்கலாகாது. இறை நெறிக்கும் தீய நெறிக்கும் தொடர்பேது?
15 ஒளிக்கும் இருளுக்கும் உறவேது? கிறிஸ்துவுக்கும் பேலியாருக்கும் உடன்பாடு உண்டோ?
16 அவிசுவாசியோடு விசுவாசிக்குப் பங்குண்டோ? கடவுளின் கோயிலுக்கும் தெய்வங்களின் சிலைகளுக்கும் பொருத்த முண்டோ? உயிருள்ள கடவுளின் கோயில் நாம்தான்; இதைக் கடவுளே சொல்கிறார்: " அவர்களிடையே குடிகொள்வேன்; அவர்கள் நடுவில் நடமாடுவேன். அவர்களுக்கு நான் கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பர்.
17 ஆகவே, வேற்று மக்களிடமிருந்து வெளியேறுங்கள்; அவர்களைவிட்டுப் பிரிந்துபோங்கள் என்கிறார் ஆண்டவர். அசுத்தமானதைத் தொடவேண்டாம்; நாம் உங்களை ஏற்றுக்கொள்வேன்,
18 உங்களுக்கு நான் தந்தையாய் இருப்பேன்; எனக்கு நீங்கள் புதல்வராகவும், புதல்வியராகவும் இருப்பீர்கள் என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×