Bible Versions
Bible Books

Esther 4 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மார்தொக்கே இவற்றைக் கேள்வியுற்றுத் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கோணி ஆடை உடுத்தித் தலையில் சாம்பலைப் போட்டுக் கொண்டார். தம் மனத்துயரை வெளிக்காட்ட நகரின் நடுவில் நின்று உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்.
2 இவ்வாறு அழுது கொண்டு அரண்மனைத் தலைவாயில் வரை வந்தார். ஏனெனில் கோணி ஆடை உடுத்திய எவரும் அரண்மனைக்குள் நுழைய அனுமதியில்லை.
3 அரசனின் கட்டளையைக் கேட்கவே, எல்லா மாநிலங்களிலும் நகரங்களிலும் கிராமங்களிலுமிருந்த யூதர்கள் பெரும் துயருற்றனர். உண்ணா நோன்பிருந்து அழுது புலம்பினர். அத்தோடு அவர்களில் பலர் கோணி ஆடை உடுத்திச் சாம்பலில் அமர்ந்திருந்தனர்.
4 அப்போது எஸ்தருடைய தோழியரும் அண்ணகரும் அவளுக்கு அதை அறிவித்தார்கள். அதனால் அவள் மிகவும் துயருற்றாள். பிறகு மார்தொக்கேய்க்கு ஆள் அனுப்பி, அவர் உடுத்தியிருந்த கோணி ஆடையைக் கழற்றிவிட்டுத் தான் அனுப்பி வைத்திருந்த உடையை உடுத்திக்கொள்ளுமாறு மன்றாடினாள். அவரோ அந்த உடையைப் பெற்றுக் கொள்ளவில்லை.
5 எனவே எஸ்தர் தனக்கு ஏவல் புரிய அரசனால் நியமிக்கப்பட்டிருந்த அத்தாக் என்னும் அண்ணகனை அழைத்து, "நீ மார்தொக்கேயைப் போய்ப் பார்த்து அவர் அவ்விதக் கோலம் புனைந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டு வா" என்று அனுப்பி வைத்தாள்.
6 அவ்வாறே அத்தாக் அரண்மனை வாயில் முன் வீதியில் நின்று கொண்டிருந்த மார்தொக்கேயிடம் சென்றான்.
7 அப்பொழுது மார்தொக்கே தமக்கு நிகழ்ந்துற்ற எல்லாவற்றையும், யூதர்களின் அழிவிற்கு ஈடாக அரச கருவூலத்திற்குக் கொடுப்பதாக ஆமான் வாக்களித்திருந்த பணத் தொகையைப் பற்றியும் அவனுக்கு விவரமாய் அறிவித்தார்.
8 மேலும் சூசாவில் வெளியிடப்பட்ட அரச கட்டளையின் நகலை அவன் கையில் கொடுத்து அதை எஸ்தருக்குக் காட்டவும், அவள் கட்டாயம் அரசனிடம் போய்த் தன் இனத்தவர்க்காக அவனைக் கெஞ்சி மன்றாட வேண்டும் என்று அவளுக்குக் கூறவேண்டும் என்றும் சொல்லியனுப்பினார்.
9 அத்தாக் திரும்பி வந்து மார்தொக்கே கூறியவற்றை எல்லாம் எஸ்தருக்கு அறிவித்தான்.
10 எஸ்தர் அத்தாக் வழியாக மார்தொக்கேய்க்குப் பதில் சொல்லி அனுப்பினாள்.
11 ஆண், பெண் யாரேனும் அழைப்பின்றி அரசரின் உள்முற்றத்தில் நுழையத் துணிந்தால், அவர்கள் உயிர்பிழைக்கும்படி அரசர் அவர்கள் மீது கருணை கொண்டு தம் பொற் செங்கோலை நீட்டிக் காப்பாற்றினாலொழிய, உடனே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டு. இது அரசரின் எல்லாப் பணியாளருக்கும் இந்நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் தெரியுமே. இந்த முப்பது நாளும் அரசர் என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் எப்படி நான் அவரிடம் போவது?" என்று சொல்லச் சொன்னாள்.
12 இதைக்கேட்டு மார்தொக்கே, மீண்டும் எஸ்தருக்கு மறுமொழியாக,
13 நீ அரண்மனையில் இருப்பதனால், மற்ற யூதர் அனைவரும் சாக, நீ மட்டும் சாகாது உயிர் வாழலாம் என்று நினைக்க வேண்டாம்.
14 நீ இப்பொழுது வாளா இருந்து விட்டாலும் வேறு வழியாய் யூதர்கள் காப்பாற்றப்படலாம். ஆனால், அப்பொழுது நீயும் உன் தந்தையின் வீட்டார் அனைவருமே அழிந்து போவீர்கள். ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவியாய் இருக்க வேண்டுமென்றே அரசி ஆனாய்" என்றான்.
15 எஸ்தர் மார்தொக்கேய்க்கு மீண்டும் ஆள் அனுப்பி,
16 நீர் போய்ச் சூசாவில் உள்ள யூதர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லாரும் எனக்காக வேண்டிக் கொள்ளச் செய்யும். மூன்று நாள் இரவு பகலாக ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் என் பொருட்டு அவர்கள் நோன்பு இருக்க வேண்டும். நானும் என் தோழியரும் அவ்வாறே நோன்பு காப்போம். பின் நான் சாவுக்கும் ஆபத்திற்கும் அஞ்சாமல் சட்டத்திற்கு மாறாக அழைக்கப்படாமலேயே அரசரிடம் செல்வேன்" என்றாள்.
17 மார்தொக்கே எஸ்தர் கூறியபடி விரைவில் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×