Bible Versions
Bible Books

John 10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுப்பட்டிக்குள் வாயில்வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக்குதிப்பவன் திருடன், கொள்ளைக்காரன்.
2 வாயில்வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன்;
3 அவனுக்கே காவலன் வாயிலைத் திறந்துவிடுகிறான்; ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன. அவன் தன் சொந்த ஆடுகளைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டு வெளியில் ஓட்டுகின்றான்.
4 தன் ஆடுகளை வெளியில் கொண்டுபோனபின் அவற்றிற்குமுன் நடந்துபோகிறான். அவனது குரல் அவற்றிற்குத் தெரியுமாதலால் ஆடுகள் அவனைப் பின்தொடர்கின்றன.
5 அந்நியனையோ அவைபின்தொடராமல், அவனை விட்டு ஓடிப்போகும். ஏனெனில், அந்நியருடைய குரலை அவை அறிந்துகொள்வதில்லை."
6 இதை இயேசு அவர்களுக்கு உவமையாகச் சொன்னார். சொன்னது என்னவென்று அவர்கள் கண்டுணரவில்லை.
7 ஆதலால் இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுமந்தைக்கு வாயில் நானே.
8 எனக்கு முன்பு வந்தவர்கள் அனைவரும் திருடர், கொள்ளைக்காரர். அவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை.
9 நானே வாயில். என் வழியாக நுழைபவன் மீட்புப்பெறுவான். உள்ளே போவான், வெளியே வருவான், மேய்ச்சலைக் கண்டடைவான்.
10 திருடுவதற்கும் கொல்லுவதற்கும் அழிப்பதற்குமேயன்றி வேறெதற்கும் திருடன் வருவதில்லை. நானோ, ஆடுகள் உயிர்பெறும்படி வந்தேன்; அதை மிகுதியாய்ப் பெறும்பொருட்டே வந்தேன்.
11 நல்ல ஆயன் நானே: நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.
12 கூலிக்கு மேய்ப்பவன், ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஆயனாயிராததால்,
13 ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான்; ஏனெனில், கூலியாள் கூலியாள்தான்; ஆடுகளின்மீது அவனுக்கு அக்கறையில்லை. ஓநாய் வந்து ஆடுகளை அடித்துக்கொண்டு போகிறது, மந்தையைச் சிதறடிக்கிறது.
14 நல்ல ஆயன் நானே.
15 தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்; அவையும் என்னை அறிகின்றன. என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்.
16 இக்கிடையைச் சேராத வேறு ஆடுகள் எனக்கு உள்ளன. அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்கவேண்டும். அவை என் குரலுக்குச் செவிகொடுக்கும். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உண்டாகும்.
17 என் உயிரை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி நான் அதைக் கையளிக்கிறேன்; ஆதலால் தந்தை என்னிடம் அன்புகூர்கிறார்.
18 எனது உயிரை என்னிடமிருந்து பறிப்பவன் எவனுமில்லை; நானாகவே என் உயிரைக் கையளிக்கிறேன். உயிரைக் கையளிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு; இதுவே என் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளை."
19 இவ்வார்த்தைகளின்பொருட்டு யூதரிடையே பிளவு உண்டாயிற்று.
20 அவர்களுள் பலர், "இவன் பேய்பிடித்த வெறியன். இவன் சொல்வதை ஏன் கேட்கிறீர்கள் ?" என்றனர்.
21 மற்றவர்களோ, "இவை பேய்பிடித்தவனுடைய வார்த்தைகளல்ல. குருடர்களுக்குப் பேய் பார்வை அளிக்கமுடியுமா ?" என்றனர்.
22 யெருசலேமில் கோயில் அபிஷுகத்திருநாள் நடைபெற்றது. அப்பொழுது குளிர்காலம்.
23 கோயிலில் சாலமோன்மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.
24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "எவ்வளவு காலத்திற்கு எங்களைத் தயங்கவைப்பீர் ? நீர் மெசியாவாக இருந்தால் தெளிவாகச் சொல்லிவிடும்" என்று கேட்டனர்.
25 அதற்கு இயேசு கூறியது: "நான் சொல்லிவிட்டேன், நீங்கள்தாம் விசுவசிக்கிறதில்லை. என் தந்தையின்பெயரால் நான் புரியும் செயல்களே எனக்குச் சாட்சியம்.
26 ஆனால், நீங்கள் என் ஆடுகளைச் சேர்ந்தவர்களாக இராததால், விசுவசிக்கிறதில்லை.
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன; நானும் அவற்றை அறிவேன். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
28 நான் அவற்றிற்கு முடிவில்லாவாழ்வு அளிக்கிறேன்; அவை என்றும் அழியா. எவனும் என் கையிலிருந்து அவற்றைக் கவர்ந்துகொள்வதில்லை.
29 அவற்றை எனக்களித்த என் தந்தை அனைவரிலும் பெரியவர்; என் தந்தையின் கையிலிருந்து எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது.
30 நானும் தந்தையும் ஒன்றே."
31 இதைக் கேட்ட யூதர் அவரைக் கல்லால் எறியும்படி கல் எடுத்தனர்.
32 இயேசுவோ, "தந்தையின் ஆற்றலால் மேலான செயல்கள் பல உங்களுக்குச் செய்துகாட்டியிருக்கிறேன். அவற்றில் எச்செயலுக்காக என்னைக் கல்லால் எறியப்போகிறீர்கள் ?" என்று கேட்டார்.
33 யூதர்கள் மறுமொழியாக, "மேலான செயல்களுக்காக நாங்கள் உன்னைக் கல்லால் எறியவில்லை. தெய்வ நிந்தனை செய்தற்காகவே அப்படிச் செய்கிறோம். ஏனெனில், நீ மனிதனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக் கொள்கின்றாய்" என்றார்கள்.
34 அதற்கு இயேசு கூறியது: " ' நீங்கள் தேவர்கள் என நான் கூறினேன் ' என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளதன்றோ ?
35 எனவே, கடவுளின் வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது. மறைநூலோ ஒழிந்துபோக முடியாது.
36 அவ்வாறிருக்க, தந்தையால் அர்ச்சிக்கப்பெற்று உலகிற்கு அனுப்பப்பட்ட நான், என்னைக் ' கடவுளின் மகன் ' என்று சொன்னதற்காக, ' தெய்வ நிந்தனை செய்கிறாய் ' என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் ?
37 நான் என் தந்தையின் செயல்களைச் செய்யாவிடில், நீங்கள் என்னை விசுவசிக்கவேண்டாம்.
38 ஆனால், நான் அவற்றைச் செய்தால் என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்; இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், அவ்வறிவில் நிலைகொள்வீர்கள்."
39 இதைக் கேட்டு அவர்கள் அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள். அவரோ அவர்கள் கையிலிருந்து தப்பிச்சென்றார்.
40 இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து, அருளப்பர் முதலில் ஞானஸ்நானம் கொடுத்துவந்த இடத்திற்குச் சென்றார்.
41 அவர் அங்குத் தங்கியிருந்தபோது, பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், "அருளப்பர் ஓர் அருங்குறியும் செய்யவில்லை; ஆனால் அருளப்பர் இவரைப்பற்றிக் கூறியதெல்லாம் மெய்யாயிற்று" என்று பேசிக்கொண்டார்கள்.
42 அங்கே பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×