Bible Versions
Bible Books

2 Corinthians 10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 கிறிஸ்துவிடம் விளங்கிய சாந்தத்தின் பெயராலும், பரிவுள்ளத்தின் பெயராலும், சின்னப்பனாகிய நானே உங்களைக் கேட்டுக் கொள்வதாவது: நான் உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன். உங்களோடு இல்லாத போது கண்டிப்பாய் இருக்கிறேன் என்றா சொல்லுகிறீர்கள்?
2 நான் ஒன்று சொல்லுகிறேன்; உங்களை நேரில் காணும்போது நான் கண்டிப்பாய் இருக்க இடமில்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிக்கும் துணிவு எனக்கில்லாமலில்லை; நாங்கள் உலகப்போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிவைத் தயங்காமல் காட்ட எண்ணுகிறேன்.
3 உலகில்தான் வாழ்கிறோம். ஆனால் எங்கள் போராட்டம் உலகப் போக்கின்படி நிகழ்வதன்று.
4 ஏனெனில், எங்கள் போராட்டத்தில் பயன்படும் படைக்கலன்கள் உலகைச் சார்ந்தவையல்ல, கடவுளின் வல்லமைகொண்டவை, கோட்டைகளைத் தகர்த்தெறியக் கூடியவை,
5 அவற்றைக் கொண்டு குதர்க்கங்களையும், கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் எத்தகைய மேட்டிமையையும் நாசமாக்குகிறோம்; மனித எண்ணங்கள் அனைத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியுமாறு அடிமைப்படுத்துகிறோம்.
6 உங்கள் சபை எனக்கு முற்றிலும் அடங்கியபின்னும், யாராவது கீழ்ப்படியாமலிருந்தால் அதற்குத்தக்க தண்டனை கொடுக்கத் தயங்கமாட்டேன்.
7 வெளித்தோற்றத்தை மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். தான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் என்று உறுதியாய் நம்பும் எவனும், மேலும் சிந்தித்துப் பார்க்கட்டும்: தான் எப்படிக் கிறிஸ்துவுக்குச் சொந்தமோ அப்படியே நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தம்.
8 எங்களுக்குள்ள அதிகாரத்தை ஆண்டவர் உங்களுடைய ஞான வளர்ச்சிக்கென்றே தந்திருக்கிறார்; உங்கள் அழிவுக்காகவன்று. அந்த அதிகாரத்தைக் குறித்துச் சற்று அதிகமாகவே நான் பெருமை பாராட்டிக் கொண்டாலும், அது வீண் பெருமையன்று என்று காண்பீர்கள்.
9 கடிதத்தால் மட்டும் உங்களுக்கு அச்சமூட்டுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
10 ' அவருடைய் கடிதங்கள் கடுமையானவை; அழுத்தம் மிக்கவை; ஆனால் ஆளை நேரில் பார்த்தால், தோற்றமும் இல்லை, பேச்சுத் திறனும் இல்லை ' என என்னைப் பற்றிச் சிலர் சொல்லுகிறார்களாம்.
11 அப்படிப் பேசுபவர்கள் நான் சொல்லுவதை மனத்திலிறுத்தட்டும்: தொலையிலிருந்து எழுதும் கடிதங்களில் எங்கள் வார்த்தை எப்படிப் புலப்படுகிறதோ, அப்படியே இருக்கும் எங்கள் செயலும் உங்களிடம் நாங்கள் வரும்போது.
12 சிலர் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுகின்றனர். அவர்களோடு எங்களையும் சேர்த்துக்கொள்ளவோ, ஒப்பிடவோ நாங்கள் துணியோம்; அவர்கள் தங்களையே அளவுகோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுத் தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்; இது அறிவீனமன்றோ?
13 நாங்கள் பெருமை பாராட்டுவதற்கு ஒர் அளவை இல்லாமல் இல்லை; கடவுள் எங்களுக்கு வரையறுத்த அளவுகோல்தான் நாங்கள் பயன்படுத்தும் அளவை; அப்படிக் கடவுள் எங்களுக்கு வரையறுத்துக்கொடுத்த அலுவலின்படி நாங்கள் உங்க?ர் வரை வரவேண்டியிருந்தது.
14 உங்கள் ஊர்வரை நாங்கள் முன்னரே வராமற்போயிருந்தால், எல்லைமீறினவர்களாய் இருப்போம்; ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் ஊர்வரைக்கும் வந்தோம்.
15 மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டவில்லை; அப்படிச் செய்தால் அது அளவையை மீறிப் பெருமை பாராட்டுவதாகும். அதற்கு மாறாக, உங்கள் விசுவாசம் வளர வளர நாங்கள் உங்கள் நடுவில் செய்யும் பணியும் விரிவடைந்து, எங்களுக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்ட எல்லையை மீறாமலே,
16 உங்க?ருக்கு அப்பால் உள்ளவர்கள் நடுவிலும், நாங்கள் நற்செய்தி அறிவிக்க இயலும் என் நம்புகிறோம்; பிறருக்குக் குறித்துள்ள எல்லையை நாங்கள் மீறி அவர்கள் செய்து முடித்த வேலையைக் குறித்துப் பெருமை பாராட்டவே மாட்டோம்.
17 பெருமை பாராட்டுவோன் ஆண்டவரைப்பற்றிப் பெருமை பாராட்டுக."
18 ஏனெனில், தன்னைப் பற்றித் தானே நற்சான்று கூறுபவன் சான்றோன் அல்லன்; ஆனால், ஆண்டவர் யாரைப்பற்றி நற்சான்று அளிக்கிறாரோ அவனே சான்றோன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×