Bible Versions
Bible Books

Jeremiah 52 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 செதேசியாஸ் ஆளத் தொடங்கிய போது அவனுக்கு வயது இருபத்தொன்று; அவன் யெருசலேமில் பதினோராண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தாயின் பெயர் அமிதாள்; இவள் இலப்னா ஊரானாகிய எரெமியாசின் மகள்.
2 யோவாக்கீம் செய்தவாறெல்லாம் அவனும் ஆண்டவர் முன்னிலையில் தீமை செய்தான்;
3 ஆண்டவர் அவர்களைத் தம் முன்னிலையிலிருந்து தள்ளி விடும் அளவுக்கு யெருசலேமின் மேலும் யூதாவின் மேலும் அவருக்குக் கோபம் மூண்டது; செதேசியாஸ் மன்னனோ பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
4 நபுக்கோதனசாருடைய ஆளுகையின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் தன் எல்லாப் படைகளோடும் யெருசலேமுக்கு எதிராய் வந்து அதனை முற்றுகையிட்டான்; அதற்கு விரோதமாய் அதனைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
5 செதேசியாசின் பதினோராமாண்டு வரையில் பட்டணம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
6 நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள் பட்டணத்தில் கடும் பஞ்சம் உண்டாயிற்று; நகர மக்களுக்கு உணவு இல்லாமற்போயிற்று.
7 பட்டணத்தின் கோட்டைச் சுவர் ஒருபுறத்தில் இடிக்கப்பட்டது; போர்வீரர்கள் அனைவரும் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு, இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி. ஓடினார்கள்; அப்பொழுது கல்தேயர் நகரைச் சுற்றி முற்றுகை யிட்டிருந்தனர்.
8 ஆனால் அதைக் கண்ட கல்தேயருடைய படை அரசனை விரட்டிக் கொண்டு ஓடிற்று; யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; அவனுடைய படைகளெல்லாம் அவனை விட்டு ஓடிப்போயின;
9 அவர்கள் அரசனைப் பிடித்து, ஏமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளைய மிறங்கியிருந்த பபிலோனிய மன்னனிடம் அழைத்து வந்தார்கள்; அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
10 பபிலோனிய அரசன் செதேசியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னாலேயே கொலை செய்தான்; இன்றும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் இரபிளாத்தாவில் கொல்லுவித்தான்;
11 பபிலோனிய அரசன் செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனை விலங்கிட்டு, அவனைப் பபிலோனுக்குக் கொண்டு போய் அங்கே அவன் சாகும் வரையில் சிறைக் கூடத்தில் அடைத்து வைத்தான்.
12 பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் பத்தொன்பதாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரின் படைத்தலைவன் நபுஜார்தான் யெருசலேமுக்குள் நுழைந்தான்;
13 நுழைந்து ஆண்டவரின் கோயிலையும் அரசனது அரண்மனைனையும் யெருசலேமின் வீடுகள் அனைத்தையும் கொளுத்தி விட்டான்; பெரிய வீடுகளையெல்லாம் தீக்கிரையாக்கினான்.
14 படைத்தலைவனோடிருந்த கல்தேய வீரர்கள் அனைவரும் யெருசலேமைச் சுற்றிலுமிருந்த மதில்களை முற்றிலும் தகர்த்து விட்டனர்.
15 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் மக்களுள் ஏழைகளாயிருந்த சிலரையும், பட்டணத்தில் இருந்த மற்றப் பொது மக்களையும், தப்பியோடிப் பபிலோனிய மன்னனிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த தொழிலாளிகளையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
16 சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் நாட்டின் ஏழைகளுள் சிலரையும், திராட்சைப் பயிரிடுவோரையும் விவசாயிகளையும் யூதாவிலேயே விட்டுச் சென்றான்.
17 ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலக் கடல் தொட்டியையும் உடைத்து, அவற்றின் வெண்கலத்தையெல்லாம் பபிலோனுக்குக் கொண்டு போய்விட்டான்.
18 சட்டிகளையும் கரண்டிகளையும் திரிவெட்டிகளையும், குப்பிகளையும் உரல்களையும், திருப்பணிக்குப் பயன்பட்ட எல்லாப் பித்தளைப் பாத்திரங்களையும் கொண்டு போனார்கள்.
19 சேனைத்தலைவன் குடங்களையும் தூபக்கலசங்களையும் தட்டுக்களையும் சாடிகளையும் விளக்குத் தண்டுகளையும், குந்தாணிகளையும் தாம்பாளங்களையும், தங்கப் பாத்திரங்கள் எல்லாவற்றையும், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோனான்.
20 சாலமோன் அரசன் ஆண்டவருடைய கோயிலுக்கென்று செய்திருந்த தூண்கள் இரண்டு, கடல் தொட்டி ஒன்று, ஆதாரங்களின் கீழ் நிற்க வைத்திருந்த வெண்கல எருதுகள் பன்னிரண்டு ஆகியவற்றையும் கொண்டு போனான். இவற்றின் வெண்கலத்துக்கு நிறை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
21 தூண்களில் ஒவ்வொன்றும் பதினெட்டு முழம் உயரமுள்ளது; பன்னிரண்டு முழமுள்ள நூல் அதனைச் சுற்றிக் கொண்டிருந்தது; அதன் கனம் நான்கு விரற்கடை; உள்ளே குழாயாய் இருந்தது.
22 இரண்டு தூண்களின் உச்சியிலும் ஐந்து முழ உயரமான வெண்கலக் கும்பம் இருந்தது; அதனுச்சியைச் சுற்றிலும் வலை போலப் பின்னலும் மாதுளம் பழச் சித்திரங்களும் செதுக்கப் பட்டிருந்தன; எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது தூணிலும் அவ்வாறே மாதுளம்பழம் முதலியவை செதுக்கப்பட்டிருந்தன.
23 தொண்ணுற்றாறு மாதுளங்கனிகள் தொங்கின; பின்னலைப் போலச் செதுக்கியிருந்ததைச் சுற்றி மொத்தம் நூறு மாதுளங்கனிகள் இருந்தன.
24 சேனைத்தலைவன், முதல் அர்ச்சகராகிய சராயியாசையும், இரண்டாம் அர்ச்சகராகிய சொப்போனியாசையும், தலைவாயில் காவலர் மூவரையும் பிடித்துக் கொண்டான்.
25 பட்டணத்தில் போர்வீரருக்குத் தலைவனான ஓர் அண்ணகனையும், பட்டணத்திலிருந்து அரசன் முன்னிலையில் தொண்டு புரியும் ஏழு பேரையும், புதியவர்களைச் சேனையில் சேர்த்துப் பயிற்சி தரும் சேனைத்தலைவனின் செயலாளனையும், நாட்டின் மக்களுள் பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேர்களையும் பிடித்துக் கொண்டான்.
26 படைத்தலைவனாகிய நபுஜார்தான் அவர்களைப் பிடித்து, அரபிளாத்தாவிலிருந்த பபிலோனிய அரசனிடம் கூட்டிச் சென்றான்.
27 பபிலோனிய அரசன் ஏமாத்து நாட்டில் இரபிளாத்தா என்னும் ஊரில் அவர்களை வதைத்துக் கொல்லுவித்தான்.
28 நபுக்கோதனசார் தன் ஏழாம் ஆண்டில் சிறைபிடித்துச் சென்ற மக்கட் தொகை மூவாயிரத்து இருபத்து மூன்று;
29 நபுக்கோதனசார் தன் பதினெட்டாம் ஆண்டில் யெருசலேமிலிருந்து கொண்டு போன மக்களின் எண்ணிக்கை எண்ணுற்று முப்பத்திரண்டு.
30 நபுக்கோதனசாரின் இருபத்து மூன்றாம் ஆண்டில் சேனைத்தலைவன் நபுஜார்தான் கூட்டிப்போன மக்களின் எண்ணிக்கை எழுநூற்று நாற்பத்தைந்து; ஆக மொத்தம் நாலாயிரத்து அறுநூறு பேர் கொண்டு போகப்பட்டார்கள்.
31 யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் பிடிப்பட்டுக் கொண்டுபோகப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டில், பபிலோனிய அரசனான எவில்- மேரோதாக்கு தன் ஆளுகையின் முதல் ஆண்டிலேயே பன்னிரண்டாம் மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை கண்ணியப்படுத்திச் சிறைக் கூடத்தினின்று விடுவித்தான்.
32 அவனோடு மிகுந்த அன்புடன் அளவளாவினான்; மேலும் பபிலோனில் தனக்குக் கீழ்ப்பட்ட அரசர்களின் அரியணைக்கு மேல் அவனுடைய அரியணையை உயர்த்தித் தனக்கடுத்த இடத்தைத் தந்தான்.
33 அவனுடைய சிறைக்கூடத்து ஆடைகளை மாற்றுவித்து, அவன் தன் வாழ்நாளெல்லாம் எப்போதும் தன்னோடு உண்ணும்படி செய்தான்.
34 அவனுடைய அன்றாடச் செலவுக்கு வேண்டியது, பபிலோனிய அரசனின் கட்டளைப்படி நாடோறும், அவனுடைய வாழ்நாள் முழுவதும், சாகுமட்டும் அவனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×