Bible Versions
Bible Books

2 Samuel 24 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஆண்டவருடைய கோபம் திரும்பவும் இஸ்ராயேல் மேல் மூண்டது. அவர்களுக்கு எதிராகத் தாவீதை அவர் ஏவிவிட்டு, "நீ இஸ்ராயேலையும் யூதாவையும் கணக்கிடு" என்றார்.
2 அப்படியே அரசர் படைத்தலைவனான யோவாபை நோக்கி, "நான் மக்களின் எண்ணிக்கையை அறியும்படி நீ தான் முதல் பெர்சபே வரை உள்ள இஸ்ராயேலின் கோத்திரங்கள் முழுவதும் சென்று மக்களைக் கணக்கிடு" என்றார்.
3 யோவாப் அரசரை நோக்கி, "உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் இப்போது இருக்கிற மக்களை என் தலைவராகிய அரசரின் கண்களுக்கு முன்பாகப் பலுகச் செய்து நூறு மடங்காய்ப் பெருகச் செய்வாராக! ஆனால் என் தலைவராகிய அரசர் இக்காரியத்தை விரும்பக் காரணம் யாதோ?" என்றான்.
4 இருப்பினும் யோவாபும் படைத் தலைவர்களும் கூறிய சொற்கள் ஏற்றுகொள்ளப் படவில்லை. எனவே, அரசரின் கட்டளையே உறுதியாயிற்று. யோவாபும் படைத்தலைவர்களும் மக்கட் தொகை எடுப்பதற்காக அரசரிடமிருந்து விடை பெற்றனர்.
5 அவர்கள் யோர்தானைக் கடந்து, காத் பள்ளத்தாக்கிலிருந்த நகருக்கு வலப்பக்கத்தில் இருந்த ஆரோயோர்க்குப் போனார்கள்.
6 பின்னர் அவர்கள் யாசேரைக் கடந்து காலாத்துக்கும் ஓத்சி என்ற கீழ்நாட்டுக்கும் தானைச் சேர்ந்த காட்டு நிலங்களுக்கும் சென்று, சிதோனைச் சுற்றி வந்து,
7 தீர் நகரின் கோட்டையின் அருகே நடந்து ஏவையர், கனானையருடைய நாடுகளில் காலெடுத்து வைத்த பின், யூதாவிற்குத் தெற்கே இருந்த பெர்சபேயிக்குச் சென்றனர்.
8 இவ்வாறு அவர்கள் நாடு முழுவதும் சுற்றி வந்து ஒன்பது மாதம் இருபது நாளுக்குப் பிறகு யெருசலேமுக்குத் திரும்பி வந்தனர்.
9 அப்போது யோவாபு மக்கட் தொகையை அரசரிடம் சமர்ப்பித்தான். இஸ்ராயேலில் வாள் எடுக்கத்தக்க போர் வீரர் எட்டு லட்சம் மனிதரும், யூதாவில் ஐந்து லட்சம் போர் வீரர்களும் இருந்தனர்.
10 ஆனால் மக்களைக் கணக்கிட்ட பின் தாவீதின் இதயம் அவரை வாட்டியது. அவர் ஆண்டவரை நோக்கி, "நான் இப்படிச் செய்ததினால் பெரும் பாவம் செய்தேன். ஆயினும் ஆண்டவரே, நான் மதிகேடான முறையில் நடந்து கொண்டபடியால் அடியேனின் தீச்செயலை அகற்றியருள வேண்டுகிறேன்" என்றார்.
11 தாவீது அதிகாலையில் எழுந்திருந்தபோது இறைவாக்கினரும் தாவீதின் திருக்காட்சியாளருமான காத் என்பவருக்கு ஆண்டவருடைய வார்த்தை வந்தது.
12 நீ தாவீதிடம் போய், 'இம் மூன்று காரியங்களில் ஒன்றை நீ தேர்ந்து கொள்ளலாம். அதில் உனக்குப் பிடித்தமானது எதுவோ அதை நான் உனக்குச் செய்வேன்' என்று ஆண்டவர் சொன்னார் என்று சொல்" என்பதாம்.
13 அதன்படியே காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "உம்முடைய நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் அல்லது மூன்று மாதம் நீர் உம் எதிரிகளுக்குப் பயந்து ஓட, அவர்கள் உம்மைப் பின் தொடர நேரிடும். இன்றேல் மூன்று நாட்களுக்கு உமது நாட்டில் கொள்ளை நோய் இருக்கும். எனவே, நீர் சிந்தனை செய்து, என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டுமென்று சொல்லும்" என்றார்.
14 அப்பொழுது தாவீது காத் என்பவரை நோக்கி, "நான் பெரும் இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். ஆயினும் மனிதர்களுடைய கையில் விழுவதை விட ஆண்டவரின் கைகளில் விழுவது நலம். (ஏனெனில் அவர் பேரிரக்கம் உள்ளவர்)" என்றார்.
15 அப்பொழுது ஆண்டவர் அன்று காலை தொடங்கி குறித்த காலம் வரை கொள்ளை நோய் வரச் செய்தார். அதனால் தான் முதல் பெர்சபே வரை மக்களில் எழுபதினாயிரம் பேர் இறந்தனர்.
16 மேலும் ஆண்டவரின் தூதர் யெருசலேமை அழிக்கும் பொருட்டுத் தம் கையை அதன் மேல் நீட்டின போது, ஆண்டவர் மக்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, மக்களைக் கொன்று குவித்த வானவரை நோக்கி, "போதும், இப்போது உன் கையை நிறுத்து" என்றார். அந்நேரத்தில் ஆண்டவரின் தூதர் எபூசையனான அரெவுனா என்பவனுடைய களத்திற்கு அருகில் இருந்தார்.
17 தூதர் மக்களை வதைக்கிறதைக் கண்டபோது, தாவீது ஆண்டவரை நோக்கி, "பாவம் செய்தது நானன்றோ? தீச் செயல் புரிந்தது நான் அன்றோ? இந்த ஆடுகள் என்ன செய்தன? ஆதலால் உம்முடைய கை என்னையும் என் தந்தை வீட்டாரையும் வதைக்கக் கடவதாக" என்று விண்ணப்பம் செய்தார்.
18 அன்று காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "எபூசையனான அரெவுனாவின் களத்திற்குப் போய் அங்கு ஆண்டவருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டி எழுப்பும்" என்றார்.
19 காத் சொற்படி தாவீது ஆண்டவர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்.
20 அரசரும் அவர் ஊழியர்களும் தன்னிடம் வருகிறதைக் கண்ட அரெவுனா,
21 வெளியே வந்து தரையில் முகம் குப்புற விழுந்து பணிந்து அரசரை நோக்கி, "அரசராகிய என் தலைவர் அடியேனிடம் வரவேண்டிய காரணம் என்ன?" என்றான். அதற்குத் தாவீது, "கொள்ளை நோய் மக்களை விட்டு நீங்கும்படி நான் ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவதற்காக இந்தக் களத்தை உன்னிடமிருந்து விலைக்கு வாங்க வந்துள்ளேன்" என்றார்.
22 அப்போது அரெவுனா தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசர் அதை வாங்கிக்கொண்டு தமது விருப்பப்படியே பலியிடுவாராக! இதோ தகனப்பலிக்கு வேண்டிய வண்டியும் மாடுகளும் இங்கேயே இருக்கின்றன" என்றான்.
23 அரெவுனா அவை எல்லாவற்றையும் அரசர் என்ற முறையில் அவருக்குக் கொடுத்தான். பின்பு அரெவுனா அரசரைப் பார்த்து, "தாங்கள் செய்து கொண்ட நேர்ச்சையை உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் ஏற்றுக்கொள்வாராக!" என்றான்.
24 அரசர் அவனுக்கு மறுமொழியாக, "நீ விரும்புகிறபடி நான் இலவசமாய் வாங்க மாட்டேன். அதை உன்னிடமிருந்து விலை கொடுத்தே வாங்குவேன். என் ஆண்டவருக்கு இலவசமான தகனப் பலியை நான் செலுத்த மாட்டேன்" என்றார். அப்படியே தாவீது ஐம்பது சீக்கல் நிறையுள்ள வெள்ளி கொடுத்து அந்தக் களத்தையும் அந்த மாடுகளையும் வாங்கிக் கொண்டர்.
25 அங்கே தாவீது ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் படைத்தார். ஆண்டவர் நாட்டின்மேல் இரக்கம் காட்டினார். கொள்ளை நோயும் இஸ்ராயேலிலிருந்து நீங்கிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×