Bible Versions
Bible Books

Proverbs 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 இஸ்ராயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலமோனின் பழமொழிகள்.
2 ஞானத்தையும் ஒழுக்கத்தையும் அறியவும், பிரித்தறியும் ஆற்றலை அளிக்கவும், உண்மைக் கோட்பாட்டை அறியவும்,
3 நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் அடையவும்.
4 சிறுவர்க்கு அறிவுக் கூர்மையும், வாலிபர்க்கு அறியவும் அறிவாற்றலும் தரவும் (உதவும்).
5 ஞானமுள்ளவன் அவற்றைக் கேட்டு மிகுந்த ஞானியானவன். அறிவுடையோன் அவற்றைக் கையாளும் வகை தெரிவான்.
6 அவன் பழமொழியையும் அதன் விளக்கத்தையும் ஞானிகளுடைய வார்த்தைகளையும் அவர்களுடைய மறைமொழிகளையும் நிதானித்து அறிவான்.
7 தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம். மதியீனரோ ஞானத்தையும் போதனையையும் புறக்கணிக்கின்றனர்.
8 என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேள்; உன் தாயின் கட்டளையைக் கைநெகிழாதே.
9 (அவை) உன் தலைக்கு அருளும், உன் கழுத்துக்கு அணியும்போல் இருக்கும்.
10 என் மகனே, பாவிகள் உன்னைப் புகழ்ந்து ஏமாற்றப் பார்த்தாலும் நீ அவர்களுக்கு இணங்காதே.
11 அவர்கள் சொல்லுவதாவது: நீ எங்களோடு வா. நாம் தந்திரமாய்க் கொலை செய்வோம். குற்றமற்றவனுக்கு விரோதமாய்க் கண்ணி வைப்போம்.
12 குழியில் இறங்கினவனை நரக பாதாளம் (விழுங்குவது) போல், நாம் அவனை உயிருடன் விழுங்கி விடுவோம்.
13 அவனது ஏராளமான விலைமதிக்க முடியாத சொத்தும் உடைமையும் எங்களுடையன ஆகும். அவைகளால் எங்கள் வீடுகள் நிரம்பும்.
14 (ஆதலால்) நீயும் எங்களுடன் பங்குக்கு நில். நம் அனைவருடைய பையும் ஒன்றாய் இருக்கட்டும்;
15 (என்றாலும்), என் மகனே நீ அவர்களோடு நடவாமல், அவர்களுடைய வழிகளில் நின்று உன் கால்களை விலக்கு.
16 ஏனென்றால், அவர்களுடைய கால்கள் தீமையை நோக்கி ஓடி, இரத்தத்தைச் சிந்த விரைகின்றன.
17 ஆனால், இறகுள்ள பறவைகளின் கண்முன் வலை விரிப்பது வீண்.
18 அவர்கள் தங்கள் உயிருக்கே உலை வைப்பதுமன்றி, தங்கள் ஆன்மாவுக்கு விரோதமாய் வஞ்சனையையும் ஏற்படுத்துகிறார்கள்.
19 பேராசைக்காரர் எல்லாருடைய வழிகளும் அவ்விதமானவை. அவை பொருளாசை கொண்டவர்களின் ஆன்மாக்களைக் கவர்கின்றன.
20 ஞானம் வெளியில் முழங்குகின்றது; தெருக்களில் தன் குரலை எழுப்புகின்றது;
21 மக்கட் சமுதாயத்தின் தலையில் கூவுகின்றது. நகரத்தின் வாயில்களில் அது தன் வசனங்களை எடுத்துரைப்பதாவது:
22 சிறுவர்களே, எதுவரையிலும் சிறுபிள்ளைத்தனத்தை நேசிப்பீர்கள் ? அறிவிலிகள் எதுவரைக்கும் தங்களுக்குக் கேடானவைகளை நாடுவார்கள் ? விவேகமற்றவர்கள் எதுவரையிலும் அறிவைப் பகைத்து வருவார்கள் ?
23 என் கண்டன வார்த்தைகளைக் கேட்டுத் திரும்புங்கள். இதோ என் (ஏவுதலை) உங்களுக்குத் தோற்றுவிப்பேன்; என் வார்த்தைகளையும் உங்களுக்குக் காண்பிப்பேன்.
24 நான் கூப்பிட்டேன்; நீங்கள், கேட்க மாட்டோம் என மறுத்தீர்கள். நான் என் கையை நீட்டினேன்; அதை உற்றுப்பார்த்தவன் ஒருவனும் இல்லை.
25 நீங்கள் என் ஆலோசனை அனைத்தையும் இகழ்ந்தீர்கள்; என் கண்டனங்களையும் கைவிட்டு விட்டீர்கள்.
26 நீங்கள் இறக்குந்தறுவாயில் இருக்கிறபோது நான் நகைப்பேன். நீங்கள் (அதற்குப்) பயந்திருக்கிறீர்கள்; அது உங்களுக்கு நேரிடுகையில் நான் உங்களைக் கேலி செய்வேன்.
27 திடீர் ஆபத்து உங்கள்மேல் விழுகையில், புயலைப்போல் சாவு தாக்குகையில், தொல்லையும் துன்பமும் உங்கள்மீது வருகையில்,
28 அப்போது என்னைக் கூவி அழைப்பீர்கள்; நானோ கேளேன். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; ஆனால், என்னைக் காணவுமாட்டார்கள்.
29 ஏனென்றால், அவர்கள் என் போதகத்தை மிகப் பகைத்ததுமன்றி, தெய்வ பயத்தையும் கைக்கொள்ளவில்லை.
30 என் ஆலோசனைக்கு அமையாததுமன்றி, என் கண்டனம் அனைத்தையும் புறக்கணித்தும் விட்டார்கள்.
31 அதன் நிமித்தம் அவர்கள் தங்கள் ஆலோசனைகளில் நிறைவு காண்பார்கள்.
32 சிறுவரின் அருவருப்பு அவர்களைக் கொல்லும்; அறிவிலிகளின் செல்வாக்கு அவர்களை நாசமாக்கும்.
33 ஆனால், எனக்குச் செவி கொடுப்பவன் அச்சமின்றி இளைப்பாறுவான்; தீமைகளிலும் அச்சமற்றவனாய்ப் பெருஞ் செல்வத்தில் திளைத்திருப்பான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×