Bible Versions
Bible Books

Amos 6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 சீயோனில் சிற்றின்ப வாழ்வில் திளைத்திருக்கிறவர்களே, சமாரியா மலை மேல் கவலையற்றிருக்கிறவர்களே, மக்களினங்களுள் சிறந்த இவ்வினத்தின் பெருங்குடி மக்களே, இஸ்ராயேல் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு!
2 காலானே என்னுமிடத்திற்குப் போய்ப் பாருங்கள், அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஏமாத்துக்குப் போங்கள், பிறகு பிலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள். அந்த அரசுகளை விட நீங்கள் சிறந்தவர்களோ? உங்கள் நாட்டை விடப் பரப்பளவில் அவர்களுடைய நாடு பெரியதோ?
3 தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் வன்முறையின் அரியணையை அருகில் கொண்டு வருகிறீர்கள்.
4 தந்தத்தால் இழைத்த கட்டிலில் படுத்துப் பஞ்சணையில் சாய்ந்து கிடக்கிறார்கள்; கிடையிலிருந்து ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து கொழுத்த கன்றுகளையும் சாப்பிடுகிறார்கள்;
5 வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கிறார்கள், தாவீதைப் போலப் புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.
6 கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கிறார்கள், உயர்ந்த நறுமண எண்ணெய் தடவிக் கொள்ளுகிறார்கள், ஆனால் யோசேப்பின் வீட்டாரழிவைக் குறித்துக் கலங்குகிறதில்லை!
7 ஆகையால் அவர்கள் தான் முதற் கண் நாடு கடத்தப்படுவர், சிற்றின்பம் தேடுகிறவர் கூட்டம் அற்றுப்போகும்."
8 இறைவனாகிய ஆண்டவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறுகிறார், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: "யாக்கோபின் செருக்கை நாம் அருவருக்கிறோம், அவனுடைய மாளிகைகளை வெறுக்கிறோம்; நகரத்தையும் அதிலுள்ளவை அனைத்தையும் நாம் கைவிட்டு விடுவோம்."
9 ஒரு வீட்டில் பத்துப் பேர்களே இருந்தால், அவர்களும் மாண்டு போவார்கள்.
10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள், ஒருவன், வீட்டின் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், "உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?" என்று கேட்க, (11) அவன், "இல்லை" என்று விடையளித்து, "உஸ்ஸ், ஆண்டவர் பெயரைச் சொல்லக் கூடாது" என்பான்.
11 (12) இதோ, ஆண்டவர் தாமே ஆணை கொடுக்கிறார், பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாய்த் தகர்ப்பார்; சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
12 (13) கற்பாறைகள் மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டி யாரேனும் கடலை உழுவாரோ? நீங்களோ நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்கசப்பாய் ஆக்கினீர்கள்.
13 (14) லோ-தபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள், "நம் சொந்த வலிமையால் கார்னாயீமைப் பிடிக்கவில்லையா?" என்கிறீர்கள்.
14 (15) இதோ, இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுக்கு எதிராக ஒரு மக்களினத்தைக் கிளப்பி விடுவோம், அவர்கள் ஏமாத்து வாயில் முதல் அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்" என்கிறார் சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×