Bible Versions
Bible Books

Ezekiel 24 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இந்த நாளின் பெயரை- பபிலோன் அரசன் யெருசலேமை முற்றுகையிட்ட நாளாகிய இந்த நாளின் பெயரை எழுது.
3 கலக வீட்டாருக்கு ஒர் உவமையைக் கூறி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு பானையை அடுப்பில் வை, வைத்து அதில் தண்ணீரை ஊற்று;
4 அதிலே இறைச்சித் துண்டுகளைப் போடு, தொடை, தோள்பகுதி, நல்லவற்றையெல்லாம் போடு, பொறுக்கியெடுத்த எலும்புகளையும் போடு,
5 மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா, விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு, இறைச்சித் துண்டுகளை வேக வை, எலும்புகளையும் அதிலே போடு, அனைத்தையும் பொங்கப் பொங்கக் காய்ச்சு.
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய நகருக்கு ஐயோ கேடு! இது ஒரு துருப்பிடித்த பானை, பிடித்த துருவை எடுக்க முடியாத பானை. ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு, அதிலுள்ளவற்றில் வேறுபாடு பார்க்காதே.
7 ஏனெனில், அது சிந்தின இரத்தம் அதன் நடுவில் இருக்கிறது; சுத்தமான பாறையின் மேல் ஊற்றப்பட்டது; மண்ணால் மறைக்கும்படி தரையில் ஊற்றப்படவில்லை.
8 நமது கோபத்தைக் காட்டவும், பழிவாங்கவுமே மண்ணால் மறைக்கப்படாதபடி இரத்தம் சுத்தமான பாறையின் மேல் விழச்செய்தோம்.
9 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய இந்த நகருக்கு ஐயோ கேடு! மிகுதியான விறகுகளை நாமும் குவித்து வைப்போம்.
10 விறகுக் கட்டைகளை அடுக்கு, நெருப்பு மூட்டி இறைச்சியை நன்றாக வேகவை; எல்லாம் ஒன்றாக வேகட்டும், எலும்புகளும் எரிந்து கரையட்டும்.
11 பிறகு பானையை நெருப்பின் மேல் வை, அது நன்றாகச் சூடேறட்டும், செப்பு நன்றாகக் காய்ந்துருகட்டும், அதன் அழுக்கு கரைந்து போகட்டும், பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
12 நாம் அதைத் தீயிலிட்டதும் வீண்தான்; ஏனெனில் அதில் மிகுந்த துருப்பிடித்திருந்ததால், நெருப்பினாலும் அதைப் போக்க முடியவில்லை.
13 உன்னுடைய அருவருப்பான வேசிச்ததனமே அந்தத் துரு. நாம் உன்னைச் சுத்தப்படுத்த விரும்பியும், நீ உன்னுடைய அசுத்தத்திலிருந்து சுத்தமாகவில்லை; ஆகையால் நமது ஆத்திரம் உன் மேல் கொட்டித் தீருமட்டும் நீ சுத்தமாகவே மாட்டாய்.
14 ஆண்டவராகிய நாமே சொன்னோம்: பழிவாங்கும் நாள் வரத்தான் போகிறது; நாம் அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கு நாம் பின்வாங்கவோ, உன்னைத் தப்பவிடவோ, உன்மேல் மனமிரங்கவோ மாட்டோம்; உன் நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி உனக்குத் தீர்ப்பளிப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
15 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
16 மனிதா, இதோ உன் கண்களுக்கு இன்பந் தருவதை ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறோம்; ஆனால் நீ புலம்பவோ அழவோ கண்ணீர் விடவோ கூடாது; மறைவாய்ப் பெருமூச்சு விடு;
17 ஆனால் சத்தமாய் இழவு கொண்டாடாதே; உன் தலைப்பாகை தலையில் இருக்கட்டும்; செருப்புகளைக் காலில் அணிந்திரு; உன் முகத்தை மூடிக்கொள்ளாதே; இழவு கொண்டாடுகிறவர் உண்ணும் உணவைப் புசிக்காதே."
18 நான் ஊராருடன் பேசினேன்; அன்று மாலை என் மனைவி இறந்து போனாள்; மறுநாட் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்தேன்.
19 அப்போது மக்கள் திரள், "நீர் செய்வதற்கு என்ன பொருள் என எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ" என்று என்னைக் கேட்டார்கள்.
20 அதற்கு நான் சொன்ன விடை இதுவே: "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் நாட்டில் பெருமை மிக்கதும், உங்கள் கண்களுக்கு இன்பந் தருவதும், அழியக்கூடாது என்று உங்கள் இதயம் விரும்பி ஏங்குவதுமான நமது பரிசுத்த இடத்தை நாம் பங்கப்படுத்தப் போகிறோம்; நீங்கள் யெருசலேமில் விட்டு வந்த உங்கள் புதல்வர் புதல்வியர் வாளுக்கு இரையாவார்கள்.
22 அப்பொழுது நீங்களும் நான் செய்தது போலச் செய்வீர்கள்: உங்கள் முகத்தை மூட மாட்டீர்கள்; இழவு நாளில் உண்ணும் உணவைப் புசிக்க மாட்டீர்கள்.
23 உங்கள் தலைப்பாகை தலையிலிருக்கும்; காலில் செருப்பு அணிந்திருப்பீர்கள்; நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள்; ஆனால் உங்கள் அக்கிரமங்களை நினைத்துச் சோர்வுற்று, ஒருவரையொருவர் பார்த்து விம்மித் தவிப்பீர்கள்.
24 இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பான்; அவன் செய்தது போல, காலம் வரும் போது நீங்களும் செய்வீர்கள்; அப்போது ஆண்டவராகிய இறைவன் நாமே என்பதை அறிவீர்கள்.'
25 மனிதா, நாம் என்றைக்கு அவர்களின் வன்மையான கோட்டை, அவர்களுடைய மகிழ்ச்சி, மகிமை, கண்களுக்கினிய காட்சி, உள்ளத்தின் ஆவல், அவர்களுடைய புதல்வர் புதல்வியர் முதலியவரை அவர்களிடமிருந்து எடுத்து விடுவோமா,
26 அன்றைக்கு அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் உன்னிடம் ஒடிவந்து செய்தி சொல்லுவான்;
27 அன்றே உன் வாய் திறக்கப்படும்; தப்பி ஒடி வந்தவனிடம் நீ வாய்திறந்து பேசுவாய்; ஊமையாய் இருக்க மாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பாய்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×