Bible Versions
Bible Books

2 Samuel 8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 இதன் பின் நிகழ்ந்ததாவது: தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை அடிமைப் படுத்தினதால் இஸ்ராயேல் அவர்களுக்குக் கப்பம் கட்டும் கடமை ஒழிந்தது.
2 அவர் மோவாபியரையும் தோற்கடித்து, அவர்களைத் தரையில் ஒரே நிரையாய்ப் படுக்க வைத்து அவர்கள்மேல் நூல்போட்டு அளந்தார்; அளக்கப்பட்டவர்களில் ஒரு பகுதி மக்களைக் கொன்றார்; மறுபகுதி மனிதரை உயிரோடு விட்டு வைத்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டி வந்தார்கள்.
3 மறுபடியும் தாவீது யூப்ரட்டீஸ் நதிக்கரையிலுள்ள நாட்டைக் கைப்பற்றச் செல்கையில், ரொகோபின் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனைத் தோற்கடித்தார்.
4 தாவீது அவனது சேனையில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாட் படையினரையும் பிடித்து, நூறு தேர்களை இழுப்பதற்கு வேண்டிய குதிரைகளைத் தவிர மற்றக் குதிரைகளின் பின்னங்கால் நரம்புகளை அறுக்கச் செய்தார்.
5 அன்றியும் தமாஸ்கு நகரத்தாராகிய சீரியர் சோபாவின் அரசன் ஆதரேஜருக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேர் தாவீதால் கொல்லப்பட்டனர்.
6 அப்போது சீரியாவின் தமாஸ்கு நகரத்தில் தாவீது நிலைப்படைகளை வைத்தார். சீரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்ட நேரிட்டது. தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.
7 ஆதரேஜருடைய ஊழியர் வைத்திருந்த பொற்படைக்கலங்களைத் தாவீது எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
8 ஆதரேஜருடைய நகர்களாகிய பெத்தேயிலிருந்தும் பெரோத்திலிருந்தும் தாவீது அரசர் மிகத்திரளான வெண்கலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
9 அப்பொழுது எமாத் அரசனான தோவு என்பவன் ஆதரேஜருடைய சேனைகளை எல்லாம் தாவீது முறியடித்தார் என்று கேள்விப்பட்டான்.
10 தோவுவின் பகைவனான ஆதரேஜருடன் தாவீது போரிட்டு அவனைத் தோற்கடித்ததால் அவன் அவருக்கு மரியாதை செலுத்தவும், வாழ்த்துச் சொல்லவும், நன்றி கூறவும் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பினான். யோராம் தன் கையில் பொன், வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களை எடுத்துச் சென்றான்.
11 தாவீது இவற்றை வாங்கிக் கொண்டார். முன்பு தாம் முறியடித்த சீரியர், மோவாபியர் அம்மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலியோரிடமிருந்தும்
12 இராகோப் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனிடத்தினின்றும் பெற்றிருந்த வெள்ளியையும் பொன்னையும் ஆண்டவருக்குக் காணிக்கை செய்தது போல், இவற்றையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.
13 இவ்வாறு தாவீது தமக்கே புகழ் தேடிக் கொண்டார். அவர் சீரியாவைப் பிடித்த பின் திரும்பி வரும் வழியில் உப்புப் பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினார்.
14 அன்றியும் தாவீது இதுமேயா நாடெங்கும் காவலர்களையும் பாசறைகளையும் வைத்தபடியால் இதுமேயர் அனைவரும் தாவீதின் அடிமைகள் ஆயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.
15 அவ்வாறே தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி புரிந்து எல்லா மக்களுக்கும் நீதி வழங்கி வந்தார்.
16 சார்வியாவின் மகன் யோவாப் படைத்தலைவனாய் இருந்தான். அகிலூத் மகனான யோசபாத் ஆவணங்களைப் பாதுகாக்கும் பதவியில் இருந்தான்.
17 அக்கிதோபின் மகன் சாதோக்கும், அபியாத்தாருடைய மகன் அக்கிமெலேக்கும் குருக்களாகவும், சராயீயாசு எழுத்தனாகவும் இருந்தனர்.
18 யோயியதாவின் மகன் பனாயாசோ கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வரோ குருக்களாய் இருந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×