Bible Versions
Bible Books

Isaiah 42 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 இதோ தம் ஊழியன், அவரை நாம் ஆதரிக்கிறோம், அவர் நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், அவரிடத்தில் நம் உள்ளம் பூரிப்படைகின்றது, அவர் மேல் நம்முடைய ஆவியைத் தங்கச் செய்தோம், அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
2 அவர் சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; அவர் குரல் தெருவிலே கேட்காது.
3 அவர் நெறிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார். உண்மையுள்ளவராய் அறத்தைக் கொணர்வார்.
4 உலகில் அறத்தை நிலைநாட்டும் வரை, அவர் மனந்தளர மாட்டார், ஊக்கங்குறைய மாட்டார்; அவருடைய சட்டத்திற்காகத் தீவுகளும் காத்திருக்கின்றன.
5 வான்வெளியைப் படைத்து அதை விரித்தவரும், மண்ணுலகை நிலைநிறுத்தி, அதில் செடிகளை முளைப்பித்தவரும், அதன் மேல் இருப்பவர்களுக்கு மூச்சைக் கொடுத்து, நடமாடுகிறவர்களுக்கு ஆவியைத் தந்தவருமான ஆண்டவராகிய கடவுள் கூறுகிறார்:
6 ஆண்டவராகிய நாமே அறத்தை நிலை நாட்ட உன்னை அழைத்திருக்கிறோம், உன் கையைப் பிடித்து உன்னைக் காத்தோம்;
7 குருடர்களுக்குக் கண்களைத் திறக்கவும், கட்டுண்டவரைத் தளையினின்று விடுவிக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும், உன்னை மக்களுக்கு உடன்படிக்கையாகவும், புறவினத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்தினோம்.
8 ஆண்டவர் நாமே' இதுவே நமது பெயர்; நமது மகிமையைப் பிறருக்கோ நமது புகழைச் சிலைகளுக்கோ விடவே மாட்டோம்.
9 முன்பே அறிவிக்கப்பட்டவை இதோ நிகழ்ந்துவிட்டன, இப்பொழுது புதியனவும் நாம் அறிவிக்கிறோம், அவை நடைபெறுவதற்கு முன்னமேயே உங்களுக்கு நாம் சொல்லி வைக்கிறோம்."
10 கடலே, கடல் வாழ் உயிரினங்களே, தீவுகளே, அவற்றில் வாழும் மனிதர்களே, ஆண்டவருக்குப் புதிய பாட்டைப் பாடுங்கள், பூமியின் எல்லைகளிலிருந்து அவர் புகழைக் கூறுங்கள்.
11 பாலை நிலமும் அதன் நகரங்களும், கேதார் மக்கள் வாழும் ஊர்களும் குரலை உயர்த்தட்டும்; சேலாவில் வாழ்பவர்களே, மகிழ்ச்சியால் பாடுங்கள், மலைகளின் உச்சியினின்று ஆர்ப்பரியுங்கள்.
12 ஆண்டவருக்கு மகிமை செலுத்துவார்கள், தீவுகளில் அவர் புகழை அறிவிப்பார்கள்.
13 வல்லவனைப் போல் ஆண்டவர் கிளம்பிடுவார், போர் வீரனைப் போலச் சினங் கொண்டெழுவார்; உரத்த குரலில் அதட்டுவார், முழக்கம் செய்வார், தம் எதிரிகள் மீது வல்லமையை வெளிப்படுத்துவார்.
14 நெடுங்காலமாய்ப் பேசாமலிருந்தோம், மௌனம் காத்துப் பொறுமையாய் இருந்தோம்; பிள்ளை பெறுகிற பெண்ணைப் போலக் கூக்குரலிடுகிறோம், வேதனையால் மூச்சுத் திணறுகிறோம்.
15 மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவோம், அவற்றின் பசும்புல் அனைத்தையும் உலரச் செய்வோம்; நதிகளை மணல் திட்டுகளாக மாற்றுவோம், நீர் நிலைகளை வறண்டு போகச் செய்வோம்.
16 குருடர்களை அவர்கள் அறியாப் பாதையில் நடத்திச் செல்வோம், அவர்களுக்குத் தெரியாத வழிகளில் அவர்களை நடக்கச் செய்வோம்; அவர்கள் முன் இருளை ஒளியாக்குவோம், கோணலான வழிகளை நேராக்குவோம்; ஆம், இதெல்லாம் அவர்களுக்காகச் செய்வோம், அவர்களை நாம் கைவிட மாட்டோம்.
17 செதுக்கப்பட்ட சிலைகள் மேல் நம்பிக்கை வைப்போரும், வார்த்துச் செய்த உருவங்களிடம், "எங்கள் தெய்வங்கள் நீங்களே" என்போரும், பின்னடைந்து போவார்கள், வெட்கி நாணமடைவார்கள்.
18 செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, பார்ப்பதற்குக் கண்ணைத் திறங்கள்;
19 யார் அந்தக் குருடன்? நம் ஊழியன் தான். யார் அந்தச் செவிடன்? நாம் அனுப்பும் தூதன் தான். நம்மால் அனுப்பப்பட்டவனைப் போலக் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியனைப் போலச் செவிடன் யார்?
20 பல காரியங்களைப் பார்க்கிறாய், ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கிறதில்லை; உன் செவிகள் திறந்திருக்கின்றன, ஆனால் நீ கேட்கிறதில்லை.
21 தம்முடைய நீதியை முன்னிட்டு ஆண்டவர், திருச்சட்டத்தை மகிமைப்படுத்தி உயர்த்த ஆவலுற்றார்.
22 ஆனால் இந்த மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர், பொருட்களைப் பறிகொடுத்தனர்; அவர்கள் அனைவரும் படுகுழிகளில் அகப்பட்டனர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்; அவர்களும் கொள்ளைப் பொருளாயினர், அவர்களை விடுவிப்பவன் எவனுமில்லை; அவர்கள் சூறையாடப்பட்டனர், "திருப்பிக் கொடு" என்று சொல்பவர் யாருமில்லை.
23 உங்களில் இதைக் கேட்கிறவன் யார்? வரப்போகின்றவற்றைக் கவனித்துக் கேட்பவன் எவன்?
24 யாக்கோபைச் சின்னா பின்னமாக்கும்படியும், இஸ்ராயேலைக் கொள்ளையடிக்கும்படியும், எதிரிகளுக்குக் கையளித்தவர் யார்? யாருக்கு விரோதமாய் நாம் பாவஞ் செய்தோமோ அந்த ஆண்டவரன்றோ கையளித்தார்? அவருடைய வழிகளில் நடக்க மறுத்தார்கள், அவரது சட்டத்தை அவர்கள் கேட்கவில்லை.
25 ஆகவே இஸ்ராயேல் மீது தம் சினத்தையும் ஆத்திரத்தையும் கொட்டினார், போரின் கொடுமையைக் காட்டினார்; அதைச் சுற்றிலும் அது தீ மூட்டிற்று, இஸ்ராயேலோ அதை உணரவில்லை; தீ இஸ்ராயேலைச் சுட்டெரித்தது, ஆயினும் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×